/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கில் ஆயத்த ஆடைகள்: அதிகாரிகள் 'ஷாக்'
/
விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கில் ஆயத்த ஆடைகள்: அதிகாரிகள் 'ஷாக்'
விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கில் ஆயத்த ஆடைகள்: அதிகாரிகள் 'ஷாக்'
விளைபொருட்கள் சேமிப்பு கிடங்கில் ஆயத்த ஆடைகள்: அதிகாரிகள் 'ஷாக்'
ADDED : மார் 05, 2026 05:02 AM
தேவனஹள்ளி: விவசாய விளைபொருட்கள் குளிர்பதன சேமிப்பு கிடங்கில், ஆயத்த ஆடைகள் சேமிக்கப்பட்டதால், அந்த மையத்தை வணிக வரித்துறை அதிகாரிகள் கையகப்படுத்தினர்.
பெங்களூரு ரூரல் மாவட்டம் தேவனஹள்ளி தாலுகா பூஜேனஹள்ளி கிராமத்தில், விவசாயிகளுக்கு உதவும் நோக்கில் குளிர்பதன சேமிப்பு கிடங்கு ஒன்றை, கர்நாடக விவசாய உற்பத்தி பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி கழகம் அமைத்தது.
'சீல்' வைப்பு தேவனஹள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் பழங்கள், காய்கறிகளை கெடாமல் பதப்படுத்தி வைப்பதற்காக, இந்த குளிர்ப்பதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்பட்டது.
அதை நிர்வகிக்கும் பொறுப்பு, முன்னாள் எம்.எல்.சி., பாரூக்குக்கு சொந்தமான, 'பிஜா அக்ரோ வெஞ்சர்ஸ் பிரைவேட் லிமிடெட்'டிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஒப்பந்தப்படி இந்நிறுவனம் வாடகை செலுத்தவில்லை. அதனால், இந்நிறுவனம் செலுத்திய டிபாசிட் தொகையை, கர்நாடக விவசாய உற்பத்தி பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி கழகம் முடக்கியது. ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும் உத்தரவிட்டது. அதையெல்லாம், பிஜா நிறுவனம் பொருட்படுத்தவில்லை.
இதற்கிடையே, இந்த குளிர்ப்பதன சேமிப்பு கிடங்கில், விவசாய உற்பத்தி பொருட்களுக்கு பதிலாக, வேறு பொருட்களை சேகரித்து வைப்பதாக, வர்த்தக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இரண்டு நாட்களுக்கு முன், அங்கு சென்று அதிகாரிகள் சோதனை நடத்திய போது, குளிர்ப்பதன சேமிப்பு கிடங்கில் ஆயத்த உடைகள், மசாலா பொருட்களை சேகரித்து வைத்திருந்தது தெரிய வந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குளிர்ப்பதன சேமிப்பு கிடங்கிற்கும், 'சீல்' வைத்தனர்.
மசாலா பொருட்களுக்கு வரி செலுத்தப்பட்டுள்ளது. எனவே, அவற்றை உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளனர். ஆயத்த ஆடைகளுக்கு பில்கள் இல்லை. வரி ஏய்ப்பு செய்திருக்கலாம் என, அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். எனவே, அவற்றை முடக்கி வைத்துள்ளனர்.
நோட்டீஸ் கர்நாடக விவசாய உற்பத்தி பொருட்கள் பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி கழகத்தின் நிர்வாக அதிகாரி சிவ பிரகாஷ் கூறியதாவது:
பிஜா ஆக்ரோ வென்ஞர்ஸ் நிறுவனம், ஒப்பந்தப்படி நடக்கவில்லை. சட்டப்படி நோட்டீஸ் அனுப்பி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டோம். ஆனாலும், அந்நிறுவனத்தினர் குளிர்ப்பதன சேமிப்பு கிடங்கை எங்களிடம் ஒப்படைக்கவில்லை.
இப்போது சட்டவிரோதமாக வேறு பொருட்களை சேமித்து வைத்திருப்பது நடந்துள்ளது. ரெடிமெட் உடைகள், மசாலா பொருட்களை சேகரித்து வைக்க, குளிர்ப்பதன மையத்தை கட்டவில்லை.
தேவனஹள்ளி சுற்றுப்பகுதி விவசாயிகள், தாங்கள் விளைவிக்கும் பழங்கள், காய்கறிகளை சேமித்து வைக்கும் நோக்கில், இம்மையம் கட்டப்பட்டது.
ஆனால், ரெடிமெட் உடைகள், மசாலா பொருட்களை சேகரித்து வைக்க மையம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வர்த்தக வரித்துறை அதிகாரிகள், விசாரணையை முடித்த பின், குளிர்ப்பதன மையத்தை, எங்களிடம் ஒப்படைப்பர்.
இவ்வாறு அவர் கூறினார்.

