ADDED : ஆக 04, 2026 02:13 AM
பெங்களூரு: 'அமைச்சர் பதவி கிடைக்காததால், ராஜினாமா மிரட்டல் நாடகம் நடத்துபவர்களின் ராஜினாமா கடிதங்களை பெற்றுக் கொள்ளுங்கள்' என சிவகுமாருக்கு காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டு உள்ளது.
முதல்வர் சிவகுமார் தலைமையில் நேற்று புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடந்தது. புதிய அமைச்சர்கள் பெயர் பட்டியலை பார்த்த சித்தராமையா, பதவியேற்பை புறக்கணித்தார். ஆனாலும், அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் சித்தராமையாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதற்கிடையில், அமைச்சர் பதவி கிடைக்காததால், எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா மிரட்டல் நாடகத்தை அரங்கேற்றினர். இதை கவனித்த கட்சி மேலிடம், முதல்வர் சிவகுமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டது.
அப்போது, மாநிலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் அரசியல் மாற்றம் குறித்து முழுமையாக விளக்க கோரினர். பின், அமைச்சர் பதவி கிடைக்காதவர்களை சமாதானப்படுத்த, அவர்களுக்கு வாரிய பதவி வழங்க வேண்டும்.
இதை புறக்கணித்து ராஜினாமா நாடகத்தை அரங்கேற்றினால், அந்த ராஜினாமாவை உடனடியாக ஏற்றுக் கொண்டு, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கலாம் என முதல்வருக்கு அதிகாரம் அளித்துள்ளதாக தெரியவந்து உள்ளது.
