ADDED : அக் 04, 2025 04:25 AM
கிரிநகர்: பெண்களின் கழுத்தில் அரிவாள் வைத்து, தங்கச்செயினை வழிப்பறி கொள்ளையடித்துச் சென்றவர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரின் ஈஸ்வரி நகரில் செப்டம்பர் 13ம் தேதி அரவு, உஷா மற்றும் வரலட்சுமி ஆகியோர், விநாயகர் சதுர்த்தியையொட்டி, நடந்த கலைநிகழ்ச்சியை பார்த்துவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது பைக்கில் வந்த இரு மர்ம நபர்கள், அரிவாளை காட்டி மிரட்டி உஷா அணிந்திருந்த நகையை பறித்தனர்.
வரலட்சுமியிடம் அவர்கள் மிரட்டியபோது, செயினை தர அவர் மறுத்தார். அரிவாளால் தாக்க முற்பட்டதில் வரலட்சுமியின் கை விரல் துண்டானது. அவரிடம் செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.
உஷாவிடம் 10 கிராம், வரலட்சுமியிடம் 45 கிராம் எடையுள்ள செயின் கொள்ளையடிக்கப்பட்டது.
கிரிநகர் போலீசார் விசாரணை நடத்தி, பிரவீன், 35, என்பவரை நேற்று கைது செய்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய யோகானந்தை தேடி வருகின்றனர்.
திருட்டு வழக்கில் பிரவீன, யோகானந்த் ஆகிய இருவரும் தனித்தனியே கைதாகி, சிறையில் இருந்தபோது, இருவருக்கும் அறிமுகம் ஏற்பட்டுள்ளது. சிறையில் இருந்து விடுதலையான பின், இருவரும் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது, விசாரணையில் தெரிய வந்தது.
