ஷாமியானா கடைக்கு தீ மிரட்டல் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
ஷாமியானா கடைக்கு தீ மிரட்டல் மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
ADDED : மே 15, 2026 03:39 AM

தங்கவயல்: ஷாமியானா கடைக்கு தீ வைப்பதாக, வியாபாரியை மிரட்டி, பணம் பறித்த ரவுடி லெனின் கைது செய்யப்பட்டார்.
ஆண்டர்சன்பேட்டையை சேர்ந்தவர் ஸ்டான்லி. இவரது மகன் லெனின், 38, ரவுடி. ஆண்டர்சன்பேட்டையில் ஷாமியானா பந்தல் அமைக்கும் கடை வைத்து உள்ளவர் முகமது சுக்லின்.
ஸ்டான்லி வீட்டில், ஒரு முறை ஷாமியானா அமைத்த போது, அதற்கான தொகையை வழங்காமல் பாக்கி வைத்திருந்தார். அந்த பாக்கி தொகையை தருமாறு முகமது சுக்லின் கேட்டுள்ளார்.
ஆனால் பணத்தை வழங்காமல் ஸ்டான்லி குடும்பத்தினர் சுக்லினை மிரட்டி, விரட்டி விட்டனர்.
இந்நிலையில், நேற்று முன் தினம், ரவுடி லெனின், ஷாமியானா கடைக்கு சென்றார். தன் சகோதரி திருமணத்திற்கு ஷாமியானா அமைக்க வேண்டும் என்று கேட்டார்.
இதை கேட்ட சுக்லின், ஏற்கனவே, 25,000 ரூபாய் பாக்கி உள்ளது; அந்த பணத்தை கொடுத்தால் மட்டுமே பந்தலை அமைத்து தருவதாக சுக்லின் கூறியுள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த லெனின், அவரை மிரட்டி அவரிடமிருந்த 8,000 ரூபாயை பறித்து உள்ளார்.
மேலும், திருமணத்திற்காக ஒரு லட்ச ரூபாயும், மாதம் தோறும் தலா, 5,000 ரூபாயும் தர வேண்டும். கொடுக்க மறுத்தால் ஷாமியானா கடையை தீ வைத்து எரித்து விடுவதாக மிரட்டி உள்ளார்.
இது சம்பந்தமாக சுக்லின், ஆண்டர்சன்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து, லெனினை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.
தங்கவயல் போலீஸ் எஸ்.பி., ஷிவான்ஷு ராஜ்புத் கூறுகையில், ''தங்கவயலில் அமைதியை, சீர்குலைக்க முயற்சிப்போர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பல ரவுடிகள், மாவட்டத்தை விட்டு வெளியேற்றப் பட்டுள்ளனர்.
''பொது அமைதியை கெடுப்பவர்கள் குறித்து, பொதுமக்கள் போலீஸ் துறைக்கு தகவல் அளிக்க வேண்டும். அத்தகையோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
ரவுடி செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில், லெனின் தந்தை ஸ்டான்லி, தங்கவயலிலிருந்து கலபுரகிக்கு வெளியேற்றப்பட்டார்.
