/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
திருமண மண்டபத்தில் ரூ.25 லட்சம் நகை 'அபேஸ்'
/
திருமண மண்டபத்தில் ரூ.25 லட்சம் நகை 'அபேஸ்'
ADDED : ஜூன் 03, 2025 01:54 AM
ராஜாஜி நகர்: திருமண மண்டபத்தில், மணமகளின் அறையில் இருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள் திருட்டு போயின.
பெங்களூரின் கவிபுரம் லே - அவுட்டில் வசிப்பவர் சிவசங்கர். இவர் தன் மகளுக்கு திருமண ஏற்பாடுகள் செய்திருந்தார். ராஜாஜி நகரின் வெஸ்ட் ஆப் கார்டு சாலையில் உள்ள, சப்தபத திருமண மண்டபத்தில் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
திருமண வரவேற்பு, மே 29ம் தேதி நடந்தது. நிகழ்ச்சிக்கு உறவினர்கள், வி.ஐ.பி.,க்கள் வந்தனர். விலை உயர்ந்த பொருட்கள், ரொக்கப்பணம் உள்ளிட்டவை பரிசாக வந்தன. அன்றிரவு பணத்தையும், தங்க நகைகளையும் சூட்கேசில் வைத்து, மணமகளின் அறையில் வைத்திருந்தனர். மறுநாள் முகூர்த்தம் நடந்தது. அதிகாலையிலேயே தயாரான மணப்பெண், தேவையான நகைகளை அணிந்து கொண்டு, மீதியை அறையில் அதே சூட்கேசில் வைத்துவிட்டு, மணமேடைக்கு சென்றார்.
முகூர்த்தம் முடிந்து, அறைக்கு வந்து பார்த்தபோது, சூட்கேஸ் காணாமல் போனது தெரியவந்தது. மணமகளின் தந்தை சிவசங்கர், மாகடி சாலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசாரும் திருமண மண்டபத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்தபோது, அடையாளம் தெரியாத நபர், மணமகளின் அறைக்குள் சென்று வெளியேறியது தெரிந்தது. இவரை கண்டுபிடிக்க போலீசார் முயற்சிக்கின்றனர்.