/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வீட்டு உரிமையாளர்களிடம் ரூ.60 கோடி நுாதன மோசடி
/
வீட்டு உரிமையாளர்களிடம் ரூ.60 கோடி நுாதன மோசடி
ADDED : செப் 17, 2025 08:38 AM

எலக்ட்ரானிக் சிட்டி: வீடுகளை குத்தகைக்கு எடுப்போரிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வசூலித்து, வீட்டு உரிமையாளர்களுக்கு கொடுக்காமல் 60 கோடி ரூபாய் மோசடி செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு, எலக்ட்ரானிக் சிட்டியில், கெட்டினா ஹோம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இதை விவேக் கேசவன் என்பவர் நடத்தி வந்தார். வாடகைக்கு வீடு தேடுவோருக்கு வீடு தேடிக் கொடுப்பது; குத்தகைக்கு ஏற்பாடு செய்யும் வேலையை, இந்த நிறுவனம் செய்தது. இந்த நிறுவனத்தின் உதவியுடன், எலக்ட்ரானிக் சிட்டி, ஹெப்பகோடி, பரப்பன அக்ரஹாரா, மாரத்தஹள்ளி, அம்ருதஹள்ளி, பானஸ்வாடி உட்பட நகரின் பல பகுதிகளில், வீடுகளை பலரும் குத்தகைக்கு எடுத்தனர். இதற்காக லட்சக்கணக்கான முன்பணத்தை தன்னிடம் கொடுக்கும்படி கேட்டு, வாடகைதாரர்களிடம் விவேக் கேசவன் வாங்கியுள்ளார்.
அப்படி வாங்கும் முன்பணத்தை சம்பந்தப்பட்ட வீடுகளின் உரிமையாளர்களிடம் கொடுக்காமல், விவேக் கேசவன் மோசடி செய்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாக அவர் பணம் வழங்கவில்லை.
இந்நிலையில் வீடுகளின் உரிமையாளர்கள், தங்கள் வீடுகளில் வசிப்போரிடம் சென்று, 'குத்தகை பணத்தை எப்போது தருவீர்கள்? அவகாசம் கடந்தும் தரவில்லை. ஆறு மாதங்களாகி விட்டது. நீங்கள் வீட்டை காலி செய்து விடுங்கள்' என்று கூறி உள்ளனர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த வாடகைதாரர்கள், 'நாங்கள் ஏற்கனவே குத்தகை பணத்தை விவேக் கேசவனிடம் கொடுத்து விட்டோமே' என்று கூறியுள்ளனர்.
'எங்களுக்கு பணம் வரவில்லை, வீட்டை காலி செய்யுங்கள்' என, வீட்டு உரிமையாளர்கள் கறாராக கூறி உள்ளனர். பணம் கொடுத்து ஏமாற்றம் அடைந்தோர், எலக்ட்ரானிக் சிட்டி போலீசில், விவேக் கேசவன் மீது புகார் செய்தனர். அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவாக உள்ள அவரை போலீஸ் தேடுகிறது. இதுவரை, 60 கோடி ரூபாய் வரை விவேக் கேசவன் மோசடி செய்திருக்கலாமென போலீசார் தெரிவித்தனர்.