ADDED : மே 17, 2026 12:47 AM

கதக்: லக்குன்டி கிராமத்தில் நடந்த அகழ்வாராய்ச்சி பணியில் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள பழங்கால தங்க நகைகள் கிடைத்து உள்ளது.
கதக் மாவட்டம், லக்குன்டி கிராமத்தில் புகழ்பெற்ற வீரபத்ரேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகே வீடு கட்ட பள்ளம் தோண்டிய போது, பழங்கால தங்க நகைகள் கிடைத்தன. இதையடுத்து அக்கிராமத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்தன. இச்சம்பவம் கடந்த ஜனவரியில் நடந்தது.
இது குறித்து கதக் மாவட்ட பொறுப்பு அமைச்சரும், சட்ட அமைச்சருமான ஹெச்.கே.பாட்டீல் கூறியதாவது:
அகழ்வாராய்ச்சில் இதுவரை 664 கிராம் தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு 8 கோடி ரூபாய். இந்த நகைகள் 600 ஆண்டுகள் பழமையானவை. இவை வெறும் நகைகள் மட்டுமல்ல. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழங்கால பொருட்கள். இதற்கு உலக சந்தையில் நல்ல மதிப்பு உள்ளது. அகழ்வாராய்ச்சி பணிகள் மாவட்ட கலெக்டர் முன்னிலையில், தொல்லியல் துறை அதிகாரிகள் உதவியுடன் நடந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
