ரூ.2,110 கோடி மோசடி வழக்கில் சிவானந்த் நீலண்ணவர் கைது
ரூ.2,110 கோடி மோசடி வழக்கில் சிவானந்த் நீலண்ணவர் கைது
ADDED : ஆக 15, 2026 01:05 AM

பெங்களூரு: பொதுமக்களிடம் இருந்து 2,110 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், தொழிலதிபர் சிவானந்த் நீலண்ணவரை, அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
பெலகாவியை சேர்ந்தவர் சிவானந்த் நீலண்ணவர். தொழிலதிபரான இவர், சிவம் அசோசியேட்ஸ் என்ற பெயரில், நிதி நிறுவனம் நடத்தினார். தனது நிறுவனத்தில் முதலீடு செய்வோருக்கு, 3 சதவீத மாதாந்திர வட்டி அல்லது, 35 சதவீத ஆண்டு வட்டி தருவதாக ஆசை காட்டினார்.
இதை நம்பி கர்நாடகாவின் வட மாவட்டங்களில் வசிக்கும் மக்கள், பக்கத்து மாநிலங்களான மஹாராஷ்டிரா, கோவா மக்களும் பணம் முதலீடு செய்தனர். மக்கள் முதலீடு செய்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த சிவானந்தா, வட்டி பணத்தை கொடுக்காமல், பொதுமக்களை ஏமாற்றினார்.
இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரில், பெலகாவி போலீசார் கடந்த மே மாதம் சிவானந்த்தை கைது செய்தனர். மோசடி வழக்கு சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்தது தெரியவந்ததால், ஈ.டி., எனும் அமலாக்கத் துறையும் விசாரித்தது.
சிவானந்த் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி, ஆவணங்களை கைப்பற்றினர். சோதனையின் போது, 2,100 கோடி ரூபாயை, சிவானந்த் மோசடி செய்தது தெரிந்தது. இதனால் நேற்று முன்தினம் அவரை, மங்களூரு மண்டல அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். நேற்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 12 நாட்கள் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கின்றனர்.
