/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளால் மேல்சபையில் அமளி
/
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளால் மேல்சபையில் அமளி
ADDED : பிப் 05, 2026 06:48 AM
பெங்களூரு: 'ஜி ராம் ஜி' திட்டம் தொடர்பாக மேல்சபையில் நடந்த விவாதத்தில், காங்கிரஸ் உறுப்பினர் நசீர் அகமதுவை விமர்சித்த பா.ஜ.,வின் ரவி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியதால் பரபரப்பு நிலவியது.
கர்நாடக மேல்சபையில் கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து, விவாதம் நடந்த போது, காங்கிரஸ் உறுப்பினர் நசீர் அகமது, பிரதமர் மோடியை விமர்சித்தார். இதனால் பா.ஜ.,வினர் கொந்தளித்து, தர்ணாவில் ஈடுபட்டனர். காங்கிரசாருக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ., உறுப்பினர் ரவி, 'நாட்டின் பிரதமரை விமர்சிக்க பயன்படுத்திய நாக்கு, இந்த நாட்டின் நாக்கு அல்ல, பாகிஸ்தானின் நாக்காக இருக்க வேண்டும்' என்றார்.
இதனால், அன்று முதல் மேல்சபையில் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது. நேற்று காலையில், சபை கூடியதும், கவன ஈர்ப்பு கேள்விகள், எழுத்து பூர்வமாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டது.
இதன்பின், காங்., தலைமை கொறடா சலீம் அகமது பேசுகையில், ''எங்கள் கட்சி உறுப்பினர் நசீர் அகமதுவை, உங்களுடையது பாகிஸ்தான் நாக்கா என, பா.ஜ.,வின் ரவி கேட்டு உள்ளார். அவர் பேசியது மிகவும் கடுமையான வார்த்தையாகும். அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும். இல்லையென்றால் அவருக்கு ச பை தலைவர் உத்தரவிட வேண்டும். பிரதமரை விமர்சித்ததற்கு, நசீர் அகமது மன்னிப்பு கோரியுள்ளார். அதே போன்று ரவியும் மன்னிப்பு கேட்க வேண்டும்,'' என்றார்.
இவரது பேச்சை, ஆளுங்கட்சியினர் ஆமோதித்தனர்.
இதற்கு பதிலடி கொடுத்த எதிர்க்கட் சி தலைவர் சலவாதி நாராயணசாமி, ''ரவி யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அவர் எந்த தவறும் செய்யவில்லை. எனவே அவர் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை,'' என்றார்.
இவருக்கு ஆதரவாக பா.ஜ., - ம.ஜ.த., உறுப்பினர்கள் நின்றனர்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதால், சபையில் குழப்பமான சூழ்நிலை உருவானது. இதனால் சபை சிறிது நேரம் தள்ளி வைக்கப்பட்டது.

