/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'எங்கள் மாநிலத்தை காப்பாற்றுங்கள்' ராஜ்யசபாவில் தேவகவுடா உருக்கம்
/
'எங்கள் மாநிலத்தை காப்பாற்றுங்கள்' ராஜ்யசபாவில் தேவகவுடா உருக்கம்
'எங்கள் மாநிலத்தை காப்பாற்றுங்கள்' ராஜ்யசபாவில் தேவகவுடா உருக்கம்
'எங்கள் மாநிலத்தை காப்பாற்றுங்கள்' ராஜ்யசபாவில் தேவகவுடா உருக்கம்
ADDED : பிப் 05, 2026 06:48 AM

முன்னாள் பிரதமரும், ம.ஜ.த., தேசிய தலைவருமான தேவகவுடா, ராஜ்யசபாவில் கர்நாடக பிரச்னைகள் குறித்து விவரித்தார்.
ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பான விவாதத்தில், தேவகவுடா பேசியதாவது:
கர்நாடகாவில் குடிநீர் பிரச்னை அதிகமாக உள்ளது. மாநிலத்தில் பல்வேறு நீர்ப்பாசன திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. இத்திட்டங்களுக்கு ஒப்புதல் அளிப்பதன் மூலம், கர்நாடகா எதிர் கொண்டுள்ள குடிநீர் பிரச்னைக்கு, மத்திய அரசு தீர்வு காண வேண்டும்.
என் ராஜ்யசபா எம்.பி., பதவி காலம், இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையவுள்ளது. என் மாநிலத்தின் விவசாயிகள் கஷ்டத்தில் உள்ளனர். அவர்களின் நலனை காப்பாற்றுங்கள். நாம் அனைவரும் மனிதர்கள்.
மழை பெய்தால் நீர் கிடைக்கிறது. இல்லாவிட்டால் தண்ணீர் இல்லை. எங்கள் மாநிலத்தை காக்க வேண்டும் என, சபையில் உள்ளவர்களை கை கூப்பி வேண்டுகிறேன்.
நான் என் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். இந்த கிழவனின் வேண்டுகோளை ஏற்று கொள்ளுங்கள். நீர்ப்பாசன உரிமைகளுக்காக, அண்டை மாநிலங்களுடன் கர்நாடகா தொடர்ந்து போராடுகிறது. நானும் கூட 65 ஆண்டாக போராடுகிறேன்.
தீர்ப்பாயங்கள் அளித்த தீர்ப்புகள் குறித்து, இந்த சபையில் விவாதிக்க நான் விரும்பவில்லை. கர்நாடகாவுக்கு தண்ணீர் பிரச்னையே பெரும் பிரச்னையாக உள்ளது. ஒரு பக்கம் தமிழகம், மற்றொரு பக்கம் ஆந்திரா, இன்னொரு பக்கத்தில் கோவா தொந்தரவு கொடுக்கின்றன.
பிரதமர் நரேந்திர மோடி அரசு, இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். நான் உங்களுடனேயே (தேசிய ஜனநாயக கூட்டணி) இருப்பேன். என் மகன் குமாரசாமி உங்கள் அமைச்சரவையில் தான் இருக்கிறார். வரும் நாட்களிலும் உங்களுடன் இருப்போம். கூட்டணியை மாற்றுவது என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
ஐரோப்பிய கூட்டமைப்பு மற்றும் அமெரிக்காவுடன் இந்தியா வெற்றிகரமாக வியாபார ஒப்பந்தம் செய்து கொண்டது பாராட்டத்தக்கது. இதற்கு காரணம் பிரதமர் நரேந்திர மோடி. இது பற்றி நான் அவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இந்தியாவின் பொருளாதாரம் வளர்கிறது. விவசாயிகளுக்காக பணியாற்றுகிறது. மோடி தலைமையில் இந்தியா வல்லரசாகும் என்பதில், சந்தேகம் இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.
-நமது நிருபர் -:

