மாணவியருக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு செருப்பு மாலை ஊர்வலம்
மாணவியருக்கு பாலியல் தொல்லை ஆசிரியருக்கு செருப்பு மாலை ஊர்வலம்
ADDED : டிச 12, 2025 06:37 AM

ஹாவேரி: மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு பள்ளி ஆசிரியரை மக்கள் அடித்து, உதைத்தனர். செருப்பு மாலை அணிவித்து, ஊர்வலம் நடத்தினர்.
ஹாவேரி மாவட்டம், சவனுாரு தாலுகாவில் உள்ள அரசு உருது பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுபவர் ஜெகதீஷ், 40. இவர் இப்பள்ளியில் படிக்கும் சில மாணவியருக்கு, பல முறை பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவியர் பயம் காரணமாக, பெற்றோரிடம் கூறவில்லை.
சில நாட்களாக மாணவி ஒருவர், கடுமையான காய்ச்சல், வயிற்று வலியால் அவதிப்பட்டார். மருந்து கொடுத்தும் குணமாகவில்லை. அதன்பின் மகளிடம் பெற்றோர் விசாரித்த போது, தனக்கு ஆசிரியர் ஜெகதீஷ் பாலியல் தொல்லை கொடுத்ததை கூறினார்.
கோபமடைந்த பெற்றோர், நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று, ஆசிரியர் ஜெகதீஷிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவருக்கும், மாணவியின் பெற்றோருக்கும் வாக்குவாதம் நடந்தது.
இந்த விஷயம் அப்பகுதியினருக்கும் தெரிந்தது. அவர்களும் மாணவியின் பெற்றோருடன் சேர்ந்து, ஜெகதீஷை தாக்கினர். அவருக்கு செருப்பு மாலை போட்டு, ஊர்வலமாக அழைத்து சென்று, போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் இவர், பள்ளியின் ஏழு மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது தெரியவந்தது. இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
