பா.ஜ., மீதான சட்டசபை தேர்தல் விளம்பரம் சித்து, சிவகுமார் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
பா.ஜ., மீதான சட்டசபை தேர்தல் விளம்பரம் சித்து, சிவகுமார் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு
ADDED : ஆக 20, 2026 11:55 PM
பெங்களூரு: முந்தைய பா.ஜ., அரசு குறித்து நாளிதழில் விளம்பரம் செய்தது தொடர்பாக, தங்கள் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி மனு தாக்கல் செய்திருந்த சிவகுமார், சித்தராமையா மீதான விசாரணை முடிவடைந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த, 2023 சட்டசபை தேர்தலின் போது, பல்வேறு பதவிகளுக்கு பா.ஜ., லஞ்சம் நிர்ணயித்து உள்ளதாக கூறி, 2023 மே 5ம் தேதியன்று அனைத்து முக்கிய நாளிதழ்களின் முதல் பக்கத்திலும், 'ஊழல் விலைப்பட்டியல்' என்ற தலைப்பில் ஒரு விளம்பரத்தை காங்கிரஸ் வெளியிட்டிருந்தது.
விளம்பரத்தின் இறுதியில், 40 சதவீதம் கமிஷன் வசூலிக்கப்படுவதாகவும், கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு, 1.5 லட்சம் கோடி ரூபாயை கொள்ளை அடித்ததாகவும் குற்றம்சாட்டியிருந்தது.
இது தொடர்பாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், சித்தராமையா, சிவகுமாருக்கு எதிராக பா.ஜ., புகார் அளித்திருந்தது. இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவர்கள் மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனு மீதான விசாரணை, நீதிபதி நாகபிரசன்னா முன் வந்தது.
புகார்தாரர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'கடந்த தேர்தலுக்கான ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள், அனைத்து செய்தித்தாள்களிலும் தவறான விளம்பரம் வெளியிட்டனர். இந்த விளம்பரத்தால், பா.ஜ., 40 இடங்களை இழக்க நேரிட்டது. மேலும், 10 சதவீத ஓட்டுகள் பா.ஜ.,வுக்கு கிடைக்காமல் போனது. எனவே, இவ்வழக்கை ரத்து செய்யக்கூடாது' என்றார்.
மனுதாரர் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'புகார்தாரர் தனிப்பட்ட புகாரை தாக்கல் செய்வதற்கு முன், கட்சியின் தேசிய பிரிவிடம் அனுமதி பெறவில்லை. இதே வழக்கில் ராகுலுக்கு எதிரான வழக்கு ரத்து செய்யப்பட்டு உள்ளது. எனவே, மனுதாரர்கள் சித்தராமையா, சிவகுமார் மீதான வழக்கையும் ரத்து செய்ய வேண்டும்' என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தீர்ப்பை ஒத்திவைத்தார்.
