மாணவர்களை தாக்கியதாக பள்ளியின் முதல்வர் வார்டன் மீது புகார்
மாணவர்களை தாக்கியதாக பள்ளியின் முதல்வர் வார்டன் மீது புகார்
ADDED : மார் 22, 2026 05:04 AM
சிக்கமகளூரு: விளையாடி கொண்டு இருந்ததற்காக ஏழு மாணவர்களை சரமாரியாக தாக்கிய பள்ளி முதல்வர் மற்றும் வார்டனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கமகளூரு மாவட்டம் முடிகெரே தாலுகாவில், ஏகலைவா உறைவிடப்பள்ளி உள்ளது. இதன் அருகே காபி தோட்டம் அமைந்து உள்ளது. திடீரென பள்ளியில் இருந்து மாணவர்களின் கூச்சல், அழுகுரல் கேட்டது. இதை கவனித்த கூலி தொழிலாளர்கள், பனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கிருந்த ஏழு மாணவர்களிடம் கேட்டபோது, 'பள்ளி முதல்வரின் அனுமதியின்றி நாங்கள் விளையாடி கொண்டிருந்தோம். அப்போது, அங்கு வந்த பள்ளி முதல்வர் சதீஷ், வார்டன் ஷுபம் ஆகியோர் எங்களை, இந்த அறையில் அடைத்து பிளாஸ்டிக் பைப், பெல்டால் சரமாரியாக தாக்கினர்' என்றனர்.
படுகாயம் அடைந்த மாணவர்கள், முடிகெரே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த குற்றச்சாட்டை மறுத்த பள்ளி முதல்வர் சதீஷ் கூறுகையில், ''நான் அவர்களை தாக்கவில்லை. சிலிண்டர்களை கொண்டு வர சொன்ன போது, அவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு உள்ளது,'' என்றார்.
வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரிக்கின்றனர்.
