கடல் தாமரை புத்தக பூங்கா உறுப்பினர் அட்டை முதிய தம்பதி அன்பான கோரிக்கை
கடல் தாமரை புத்தக பூங்கா உறுப்பினர் அட்டை முதிய தம்பதி அன்பான கோரிக்கை
ADDED : ஏப் 19, 2026 02:58 AM

பெங்களூரு: கடல் தாமரை புத்தகப் பூங்காவில் இருந்து புத்தகங்களை வீட்டுக்கு எடுத்து சென்று, படித்து விட்டு, மீண்டும் கொண்டு வர அனுமதி அளியுங்கள். இதற்காக உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும். நுாலகத்தை விரைவில் விஸ்தரிக்கவும் என முதிய தம்பதியினர் அன்பான கோரிக்கை விடுத்தனர்.
30 ஆண்டு பந்தம் பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள தினமலர் அலுவலகத்தில் இயங்கும் கடல் தாமரை புத்தகப் பூங்காவுக்கு, நேற்று எலக்ட்ரானிக் சிட்டியில் இருந்து நாராயணன், 69, ஹேமாவதி, 64, தம்பதி வந்தனர்.
இவர்கள் வெறும் கையுடன் வராமல் தங்களிடம் இருத்த ஒன்பது புத்தகங்களை எடுத்து வந்தனர். அதை நன்கொடையாக தந்து அசத்தினர்.
அவர்கள் கூறியதாவது:
எங்கள் சொந்த ஊர் விழுப்புரம். நாங்கள் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டிக்கு வந்து இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டன. எங்கள் மகன் சுரேஷ் பாலாஜி, அவரது மனைவி அபிராமியுடன் எலக்ட்ரானிக் சிட்டியில் வசிக்கிறோம். நாங்கள் விழுப்புரத்தில் இருக்கும் போதிலிருந்தே தினமலரை வாசித்து வருகிறோம். 30 ஆண்டுகளுக்கு மேலாக எங்களுக்கும், தினமலருக்கும் பந்தம் உள்ளது.
பெங்களூரு வந்தவுடன் தினமலர் கிடைப்பதை அறிந்தவுடன் உடனடியாக வாங்கி விட்டோம்; தொடர்ச்சியாக வாசித்து வருகிறோம். தினமலரில் தினமும் வரும் குறுக்கெழுத்து போட்டி மிகவும் பிடிக்கும். தினமும் நுாலகம் குறித்து வெளியாகும் செய்திகள் அருமையாக உள்ளன.
அதை வாசித்த பின்னர், நுாலகத்திற்கு எப்படியாவது வர வேண்டும் என கடந்த ஒரு மாதமாக திட்டமிட்டோம். தற்போது தான் எங்கள் எண்ணம் நிறைவேறியது. நுாலகத்திற்கு பலரும் நன்கொடையாக புத்தகங்கள் கொடுப்பதை பார்த்ததும், நம்மிடம் இருக்கும் புத்தகங்களை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இந்த ஆசையும் நிறைவேறியது.
பரவசம் இங்கு நிறைய சிறப்பான புத்தகங்கள் இருக்கின்றன. நீண்ட நாட்களாக தேடி வந்த 'புதிய வரலாறு படைத்தோரின் வரிசை முறை நுாறு பேர்' என்ற புத்தகத்தை நுாலகத்தில் பார்த்ததும் பரவசம் அடைந்தோம்.
நுாலகத்திலிருந்து புத்தகங்களை எடுத்து சென்று, படித்து விட்டு, மீண்டும் கொண்டு வர அனுமதி அளியுங்கள். இதற்காக உறுப்பினர் அட்டை வழங்க வேண்டும். நுாலகத்தை விரைவில் விஸ்தரிக்கவும். இது, எங்களது அன்பான கோரிக்கை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான நாராயணனும், ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியையுமான ஹேமாவதியும் நுாலகத்துக்கு வர வேண்டும் என்பதற்காக போக்குவரத்து நெரிசலில் 1:30 மணி நேரம் பயணித்து வந்தனர்.
