பசுமை போர்வை போர்த்தியுள்ள சீத்தாலயங்கிரி மல்லிகார்ஜுனா கோவில்
பசுமை போர்வை போர்த்தியுள்ள சீத்தாலயங்கிரி மல்லிகார்ஜுனா கோவில்
ADDED : மே 11, 2026 11:17 PM

- நமது நிருபர் -:
சிக்கமகளூரு என்றாலே முதலில் நமக்கு நினைவுக்கு வருவது, அம்மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள் தான். ஆனால், சுற்றுலாவுக்கு மட்டுமின்றி ஆன்மிகத்திற்கும் ஏற்ற இடமாக சிக்கமகளூரு உள்ளது.
சிருங்கேரி சாரதாம்பா, அம்ருதேஸ்வரா, ஹொரநாடு அன்னபூர்னேஸ்வரி, தேவீரம்மா, கலசேஸ்வரா என்று சக்தி வாய்ந்த, வரலாற்று சிறப்பு மிக்க ஏராளமான கோவில்கள் உள்ளன.
இதில் ஒன்றான சீத்தாலயங்கிரி மல்லிகார்ஜுனா கோவில் பற்றி பார்க்கலாம்.
சிக்கமகளூருக்கு சுற்றுலா வருவோர் கண்டிப்பாக முல்லையனங்கிரி மலைக்கு செல்வர். அந்த மலைக்கு செல்லும் வழியில் தான் சீத்தாலயங்கிரி மலையும் அமைந்து உள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து, 5,000 அடி உயரம் கொண்ட இந்த மலையின் உச்சியில் மல்லிகார்ஜுனா கோவில் அமைந்து உள்ளது. கருவறையில் பிரதான தெய்வமாக சிவன் உள்ளார். சிவன் சிலை எப்போதும் தண்ணீரால் சூழப்பட்டு இருக்கும் என்பதால், கன்னட வார்த்தையில் ஈரப்பதம் என்று பொருள்படும், சீதா என்ற பெயரை தேர்வு செய்து உள்ளனர்.
இதனால் இக்கோவிலுக்கு சீதா மல்லிகார்ஜுன சுவாமி என்ற பெயரும் உள்ளது. கோவில் பகுதியில் சிறிய குகை உள்ளது. இந்த குகைக்குள் அமர்ந்து பல முனிவர்கள் தியானம் செய்தனர் என்று வரலாறுகள் சொல்கின்றன.
கோவிலுக்குள் நுழையும் போது நுழைவு வாயில் கோபுரம் மேல் சிவன் சிலை உள்ளது. சிவன் சிலைக்கு முன், இரண்டு நந்திகள் இருப்பது கூடுதல் சிறப்பு.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் அமைந்து இருப்பதால், பசுமை போர்வைக்கு மத்தியில் கோவில் உள்ளது. மலை உச்சியில் இருந்து பார்க்கும் போது கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, பசுமை போர்த்திய பாறைகள், மேக மூட்டங்களை கண்டு ரசிக்கலாம்.
தினமும் காலை, 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும். சிவராத்திரி உட்பட சிவனுக்கு உகந்த நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.
