ADDED : ஜூலை 28, 2026 01:52 AM

- நமது நிருபர் -
பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், கோவில்களின் கருவூலமும் நிரம்பும். பிரசித்தி பெற்ற மேலுகோட்டே செலுவ நாராயணசுவாமி கோவில் வரலாற்றில், இப்போதே முதன் முறையாக ஏழு கோடி ரூபாய் ஆண்டு வருவாய் கிடைத்துள்ளது. இதனால், ஹிந்து அறநிலையத்துறை மகிழ்ச்சி அடைந்துள்ளது.
அமைதியான சூழல் மாண்டியா மாவட்டம், மேலுகோட்டே தாலுகாவில் செலுவ நாராயணசுவாமி கோவில் அமைந்துள்ளது. கர்நாடகாவின் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில், இதுவும் ஒன்றாகும். மஹா விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்கள், நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். தரிசனம் செய்கின்றனர். இயற்கை எழில் நிறைந்த, அமைதியான சூழலில் அமைந்திருப்பது, இதன் மற்றொரு சிறப்பாகும்.
ஆண்டுதோறும் இங்கு திருவிழா நடக்கும். குறிப்பாக இங்கு நடக்கும் வைரமுடி உற்சவம், மிகவும் பிரசித்தமானதாகும். இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். மலையில் குடிகொண்டுள்ள செலுவ நாராயணசுவாமி, கேட்கும் வரங்களை அளிப்பவர்.
இவரை தரிசித்தால் மனம் அமைதி, நிம்மதி, வாழ்க்கையில் மகிழ்ச்சி கிடைக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கையாகும். எனவே செலுவ நாராயணசுவாமியை தரிசிக்க வருகின்றனர். பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால், வருவாயும் அதிகரிக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளின் புள்ளி - விபரங்களுடன் ஒப்பிட்டால், கோவிலின் வருவாய் அதிகரிக்கிறது. 2020 - 21ம் ஆண்டு ரூ.2.29 கோடி, 2021 - 22ம் ஆண்டு, ரூ.2.60 கோடி, 2022 - 23ம் ஆண்டில், ரூ.3.34 கோடி, 2023 - 24ம் ஆண்டு ரூ.3.94 கோடி, 2024 - 25ம் ஆண்டு ரூ.3.57 கோடி வருவாய் கிடைத்திருந்தது.
ஆனால் 2025 - 26ம் ஆண்டில் உண்டியல், இ - உண்டியல், பல்வேறு சேவைகள், சிறப்பு தரிசன கட்டணம், பிரசாத விற்பனை, போட்டோ ஷூட் கட்டணம் என, பல வழிகளில் ரூ.7.03 கோடி வருவாய் வந்துள்ளது.
போட்டோ ஷூட் சமீப நாட்களாக மேலுகோட்டே செலுவ நாராயணசுவாமி கோவிலில், 'ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட்'நடத்துவது அதிகரிக்கிறது. அக்கா - தங்கை குளம், தீர்த்த குளம், வரலாற்று பிரசித்தி பெற்ற மண்டபங்கள் போன்ற இடங்களில், தினமும் பல ஜோடிகள் போட்டோ ஷூட் நடத்துகின்றனர். இதில் மட்டுமே கோவிலுக்கு, ஒரே ஆண்டில் 1.60 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.
ரொக்கம் மட்டுமின்றி, செலுவ நாராயணசுவாமியின் சொத்து அளவும் அதிகரிப்பது குறிப்பிடத்தக்கது. தங்கம், வெள்ளி, வைரம், வைடூர்ய நகைகள் கோவிலில் உள்ளன. இவற்றின் மதிப்பு, 40 கோடி ரூபாயாகும். மைசூரு மஹாராஜா காணிக்கையாக வழங்கிய, அபூர்வமான நகைகள் இன்றைக்கும் கோவில் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்டுள்ளன. நுாற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்துக்கும் சொந்தக்காரர்.
திரைப்படம், சின்னத்திரை தொடர்கள், ஆவண படங்கள் தயாரிப்போருக்கும், இக்கோவில் விருப்பமான இடமாகும். இதில் இருந்தும் கோவிலுக்கு, ஆண்டு தோறும் லட்சக்கணக்கான ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இதன் பயனாக கர்நாடகாவின் பணக்கார கோவில்களின் பட்டியலில், இடம் பிடித்துள்ளது.
