ADDED : ஜூலை 15, 2026 12:36 AM

பெங்களூரு: கர்நாடக மாநில பா.ஜ., மூத்த தலைவர் ராமசந்திர கவுடா, 88, வயது முதிர்வு காரணமாக காலமானார்.
ஆர்.எஸ்.எஸ்., பின்னணியை கொண்ட இவர், 1953ல் சங்கத்தில் இணைந்து பொது வாழ்க்கையை துவக்கினார். 1970ல் அரசியலில் நுழைந்தார்.
பெங்களூரு பட்டதாரி தொகுதியில் இருந்து ஐந்து முறை எம்.எல்.சி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எடியூரப்பாவின் அமைச்சரவையில் மருத்துவ கல்வி துறை அமைச்சராக இருந்தார்.
கடந்த 2010ல் மருத்துவ கல்லுாரி ஆட்சேர்ப்பு ஊழலில், அவரின் பெயர் அடிபட்டதால், தாமாக முன்வந்து பதவியை ராஜினாமா செய்தார். நீண்ட சட்ட போராட்டத்துக்கு பின், அவ்வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
துமகூரு மாவட்டம் ஆவரகெரே கிராமத்தில் பிறந்தவர் ராமசந்திர கவுடா. சிறு வயதிலேயே பல இன்னல்களை சந்தித்தார். இளம் வயதில் தனது தந்தையை இழந்தார். தாவணகெரேயில் பள்ளி, கல்லுாரி படிப்பை முடித்த அவர், தான் படித்த பொறியியல் கல்லுாரியிலேயே பேராசிரியராக பணியாற்றினார்.
தேசிய விருது இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்., - ஜனசங்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்த ராமசந்திர கவுடா, 1952ல் பெங்களூரு பன்னப்பா பூங்காவில் நடந்த ஷியாம் பிரசாத் முகர்ஜியின் பேச்சால் ஈர்க்கப்பட்டார். 1970ல் பெங்களூரு மாநகராட்சியில் ஜனசங்கத்தின் சார்பில் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பெங்களூரு நகர பா.ஜ., தலைவர், மாநில பொது செயலர் என பல்வேறு பதவிகளில் திறம்பட செயல்பட்டார்.
பட்டுப்புழு துறை, சிறு சேமிப்பு துறை, அறிவியல் - தொழில்நுட்ப துறை, மருத்துவ கல்வி துறை, திட்டமிடல் துறை அமைச்சராகவும், மாநில திட்ட ஆணைய துணைத்தலைவராகவும் பதவி வகித்தார். அரசியல்வாதியாக மட்டுமின்றி, சினிமா தயாரிப்பாளராகவும் ஜொலித்தார். 1970ல் ஸ்பந்தனா என்ற படத்தை தயாரித்ததற்காக, அவருக்கு தேசிய விருது கிடைத்தது.
அனைத்து கட்சி தலைவர்களிடமும் நன்மதிப்பை பெற்றவர். அவரை, எதிரிகள் இல்லாத மனிதர் என்றும் அழைப்பர்.
கடந்த சில மாதங்களாக வயது முதிர்வு நோயால் அவதிப்பட்டு வந்த அவர், பெங்களூரில் உள்ள ஜிண்டால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார்.
அவரது உடல் பசவேஸ்வர நகரில் உள்ள அவரது வீட்டில் பொது மக்கள் பார்வைக்கு உடல் வைக்கப்பட்டிருந்தது. முதல்வர் சிவகுமார், எதிர்க்கட்சி தலைவர் அசோக் உட்பட பல தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
மாலை 5:30 மணிக்கு காமாட்சி பாளையாவில் உள்ள அவரது சொந்த இடத்தில், அரசு முழு மரியாதையுடன் இறுதி சடங்கு நடந்தது. அவர் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடியை, அவரின் மனைவி யசோதாவிடம், முதல்வர் சிவகுமார் வழங்கினார்.
ராமசந்திர கவுடாவின் மகன் சப்தகிரி கவுடா இறுதி சடங்கு செய்தார். அரசு மரியாதையுடன் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் குமாரசாமி உட்பட பலர் இரங்கல் தெரிவித்தனர்.
