மூத்த குடிமக்கள் தடகளம்: 'மாஜி' அதிகாரி யோகேந்திரா தேர்வு
மூத்த குடிமக்கள் தடகளம்: 'மாஜி' அதிகாரி யோகேந்திரா தேர்வு
ADDED : ஆக 06, 2026 09:32 PM

- நமது நிருபர் -
இந்தாண்டு தென் கொரியாவில் நடக்கவுள்ள, மூத்தகுடிமக்களுக்கான, 26வது உலக தடகள போட்டிக்கு, மைசூரின் 61 வயது யோகேந்திரா தேர்வாகி உள்ளார்.
மைசூரை சேர்ந்தவர் யோகேந்திரா மாதப்பா, 61, மத்திய வரி மற்றும் சுங்கத்துறை எஸ்.பி.,யாக இருந்து ஓய்வு பெற்றவர். சிறு வயதில் இருந்தே விளையாட்டிலும், உடல் ஆரோக்கியத்திலும் ஆர்வத்துடன் இருந்தார். பி.யு.சி., படிக்கும் போது, என்.சி.சி.,யில் இருந்த அவர், தினமும் நீண்ட துாரம் ஓடி, பயிற்சி மேற்கொண்டார்.
6 கி.மீ., கட்டாயம் குடியரசு தின அணிவகுப்பின் போது, 6 கி.மீ., ஓடுவது கட்டாயம். இதை தனக்கான வாய்ப்பாக கருதிய யோகேந்திரா, தீவிர பயிற்சி மேற்கொண்டு, அணிவகுப்புக்கு தே ர்வானார்.
இதையடுத்து, நாட்டில் பல்வேறு பகுதிகளில் நடந்த தடகள போட்டிகளில் பங்கேற்றார். 1981க்கு பின், மைசூரு, கர்நாடகா மற்றும் மைசூரு பல்கலைக்கழக பிரதிநிதியாக பங்கேற்றார். இதன் மூலம், மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை பணி கிடைத்தது.
கடந்த 1982 முதல் ஐந்து ஆண்டுகள் மைசூரு பல்கலைக்கழக தடகள அணி வீரராக இருந்தார். அதன் பின், கர்நாடக அணி வீரரானார். தேசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் சிறப்பாக செயல்பட்டதால், இந்திய அணி சார்பில் அமெரிக்கா, பிரேசில், ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் நடந்த உலக மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் பங்கேற்று பதக்கங்கள் பெற்றார்.
பெருமை பெங்களூரில் நடந்த தேசிய மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் தங்கப்பதக்கம் பெற்றதால், ஸ்பெயினில் நடந்த போட்டிக்கு தேர்வானார். இதுபோல, பல போட்டிகளில் பங்கேற்று நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பெருமை தேடி தந்துள்ளார்.
மேலும், 2025ல், கோலாரில் நடந்த 24வது கர்நாடக மாநில மாஸ்டர்ஸ் தடகள போட்டியில் பங்கேற்ற அவர், 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம்; 5,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளி; கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் நடப்பாண்டு நடந்த போட்டியில், வெள்ளிப்பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.
தற்போது, தென் கொரியாவில், வரும் 22 முதல் செப்., 3ம் தேதி வரை 26வது உலக மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் 2026 போட்டி நடக்கிறது. இதில், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான, 2,000 மீட்டர், 'ஸ்டீப்பிள் சேஸ்' தடகள பிரிவுக்கு தேர்வாகி உள்ளார்.
அவர் கூறியதாவது:
என் கல்லுாரி நாட்களில் காண முடியாத என் கனவு, இப்போது நனவாவது மகிழ்ச்சி அளிக்கிறது. நாட்டுக்காக விளையாடுவது பெரிய கவுரவம். இது குடும்பத்தினர், நண்பர்களால் சாத்தியமானது. இது, என்னை நீண்ட துார ஓட்டப்பந்தயத்திற்கு உடற் தகுதியுடன் வைத்திருக்க உதவுகிறது. எனவே, இளைஞர்கள், உடல் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
