/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காங்., மூத்த தலைவர் சிவசங்கரப்பா மறைவு
/
காங்., மூத்த தலைவர் சிவசங்கரப்பா மறைவு
ADDED : டிச 15, 2025 04:56 AM

பெங்களூரு: அகில இந்திய வீரசைவ மஹாசபா தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சாமனுார் சிவசங்கரப்பா, நேற்று காலமானார்.
கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவரான சாமனுார் சிவசங்கரப்பா, 95, பிரபலமான லிங்காயத் சமுதாயத்தை சேர்ந்தவர். நகராட்சி உறுப்பினராக அரசியல் வாழ்க்கையை துவங்கியவர். 1994ல் முதன் முறையாக எம்.எல்.ஏ.,வானார்.
ஆறு முறை எம்.எல்.ஏ.,வாகவும், அமைச்சராகவும், ஒரு முறை எம்.பி.,யாகவும் பணியாற்றியவர். 2012ல் அகில இந்திய வீரசைவ மஹாசபா தலைவராக இருந்தார்.
அனுபவம் மிக்க அரசியல்வாதியான இவர், கர்நாடக காங்கிரசின் பொருளாளராகவும் இருந்தவர். தற்போது தாவணகெரே தெற்கு எம்.எல்.ஏ., வாக இருந்தார். இந்தியாவிலேயே மிகவும் மூத்த எம்.எல்.ஏ., என்ற பெருமை இவருக்குள்ளது.
சாமனுார் சிவசங்கரப்பா, அரசியல்வாதி மட்டுமல்ல. தொழிலதிபராக திகழ்பவர். கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், சர்க்கரை ஆலைகள், மருத்துவமனைகள் உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வந்தார்.
வடகர்நாடகாவில் அசைக்க முடியாத தலைவராக திகழ்ந்தவர். 1970ல் கன்னட திரைப்படம் ஒன்றை தயாரித்திருந்தார். இவரது மகன் மல்லிகார்ஜுன், முதல்வர் சித்தராமையா அரசில், தோட்டக்கலைத்துறை அமைச்சராக இருக்கிறார். இவரது மருமகள் பிரபா, தாவணகெரே எம்.பி.,யாவார்.
வயது முதிர்வு காரணமாக, உடல் நிலை பாதிக்கப்பட்ட சாமனுார் சிவசங்கரப்பா, பெங்களூரின் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று மாலை அவர் காலமானார். அவரது மறைவுக்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், முன்னாள் முதல்வர் எடியூரப்பா உட்பட, பலர் இரங்கல் தெரிவித்தனர்.

