பின்னடைவு! மூன்றாவது மொழி விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடியால் அரசுக்கு...
பின்னடைவு! மூன்றாவது மொழி விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடியால் அரசுக்கு...
ADDED : ஏப் 17, 2026 05:02 AM

கர்நாடகாவில், 10ம் வகுப்பு தேர்வு நடந்து கொண்டிருக்கும் போது, மார்ச், 31ம் தேதி பேசிய கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா, 'ஹிந்தி உட்பட மூன்றாம் மொழி பாடங்களுக்கு மதிப்பெண்ணுக்கு பதிலாக தர மதிப்பீடு வழங்கப்படும். நடப்பு நிதியாண்டு முதல், இரு மொழி முறை அமல்படுத்தப்படும்' என்றார்.
இதை எதிர்த்து, பெங்களூரை சேர்ந்த சந்தன், வெங்கடேஷ் ஆகியோர் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், விளம்பர நோக்கங்களுக்காக மனுத்தாக்கல் செய்ததாக கூறி, அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது.
இதற்கிடையில், சிக்கமகளூரை சேர்ந்த சஹானா நாயக் உட்பட மூன்று மாணவர்கள் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இம்மனு, நீதிபதி இந்திரேஷ் முன் விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வக்கீல் நாயக்: மாநில பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை அமைச்சர் மது பங்காரப்பா, 10ம் வகுப்பு தேர்வில் ஹிந்தி உட்பட மூன்றாம் மொழி பாடங்களுக்கு மதிப்பெண்ணுக்கு பதில், தர மதிப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
ஆனால், 2024 அக்., 18 மற்றும் 2025 அக்., 28ல், கே.எஸ்.இ.ஏ.பி., என்ற, கர்நாடக மாநில தேர்வுகள் மற்றும் மதிப்பீட்டு வாரியம் வெளியிட்டிருந்த சுற்றறிக்கையில், 'மூன்றாம் மொழி பாடங்களுக்கு மொத்தம், 100 மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதில், 80 மதிப்பெண்கள் எழுத்து தேர்வுக்கும், 20 மதிப்பெண்கள் அகமதிப்பீட்டுக்கும் வழங்க வேண்டும்' என்று குறிப்பிட்டுள்ளது.
அப்படிப்பட்ட நிலையில், தேர்வின் இறுதி கட்டத்தில், மதிப்பெண்ணுக்கு பதிலாக, தரமதிப்பீடுகளை வழங்கும் முடிவு, மாணவர்களுக்கு நியாயமற்றதாக இருக்கும். மேலும், யு.பி.எஸ்.சி., உட்பட மத்திய அரசு, அதன் கீழ் உள்ள அமைப்புகளால் நடத்தப்படும் போட்டி தேர்வுகள், வங்கி ஆட்சேர்ப்பு தேர்வுகளில் தரமதிப்பீட்டு முறை கருத்தில் கொள்ளப்படவில்லை.
இந்த சூழலில், மூன்றாம் மொழி பாடங்களில் தரமதிப்பீட்டு முறை செயல்படுத்தப்பட்டால், மாணவர்களின் எதிர்காலம், வேலை வாய்ப்புகளில் பாதகமான தாக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
நீதிபதி இந்திரேஷ்: மூன்றாம் மொழி பாடங்களில் தரமதிப்பீட்டு முறையை செயல்படுத்துவது தொடர்பாக, மாநில அரசு, அதிகாரபூர்வ அறிவிப்பு அல்லது சுற்றறிக்கை ஏதேனும் வெளியிட்டு உள்ளதா?
அரசு வக்கீல்: தற்போது வரைவு மட்டுமே அரசு வெளியிட்டு உள்ளது. இறுதி முடிவு குறித்து கூடுதல் தகவல்கள் அரசிடம் இருந்து பெற்ற பின்னரே சமர்ப்பிக்கப்படும்.
நீதிபதி : தற்போதுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி, 2025 - 26 10ம் வகுப்பு தேர்வில் ஹிந்தி உட்பட மூன்றாம் மொழி பாடங்களுக்கு மதிப்பெண் வழங்க மாநில அரசுக்கும், கே.எஸ்.இ.ஏ.பி.,க்கும் உத்தரவிடப்படுகிறது.
நீதிமன்றத்தின் உத்தரவால், மாநில அரசின் தரமதிப்பீட்டு திட்டத்துக்கு தற்காலிக தடை ஏற்பட்டு உள்ளது.
