ADDED : மே 08, 2026 12:59 AM

பெங்களூரு: தமிழக கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கருக்கு, கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் கண்டனம் தெரிவித்து உள்ளார். த.வெ.க., ஆட்சி அமைக்கும் உரிமையை தடுப்பது சரியல்ல என்று கூறி உள்ளார்.
பெங்களூரில், அவர் அளித்த பேட்டி:
தமிழகத்தில் விஜய் தலைமையிலான த.வெ.க., கட்சி, சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் வென்று, பெரிய கட்சியாக உருவெடுத்து உள்ளது. ஆனாலும் ஆட்சி அமைக்க அவர்களுக்கு அழைப்பு விடுக்க, அம்மாநில கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் மறுக்கிறார். அக்கட்சி ஆட்சி அமைக்கும் உரிமையை தடுக்கும், கவர்னர் நடவடிக்கை சரியல்ல.
கடந்த 2018 சட்டசபை தேர்தலில் கர்நாடகாவில் பா.ஜ., 105 இடங்களில் தான் வெற்றி பெற்றது. எடியூரப்பா ஆட்சி அமைக்க கவர்னர் அனுமதி கொடுத்தார்.
பிரதமராக இருந்த வாஜ்பாய்க்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. முதலில் பதவியேற்று பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதிக்கப்பட்டார். விஜய் விஷயத்தில் மட்டும் பாகுபாடு காட்டுவது ஏன்.
விஜயை ஆட்சி அமைக்க அனுமதித்து, பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும். தமிழக மக்கள் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க வேண்டும். அப்போது தான் ஜனநாயகம் வெல்லும்.
ஒரு ஓட்டில் பெரும்பான்மையை பெறலாம் அல்லது இழக்கலாம். பெரும்பான்மையை நிரூபிக்கவில்லை என்றால், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று பார்க்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
