இளம் அரசியல்வாதிகளுக்கு எடியூரப்பா பாதை உத்வேகம்
இளம் அரசியல்வாதிகளுக்கு எடியூரப்பா பாதை உத்வேகம்
ADDED : மே 08, 2026 12:59 AM

பெங்களூரு: இளம் அரசியல்வாதிகளுக்கு, எடியூரப்பாவின் போராட்ட பாதை உத்வேகம் அளிக்கிறது என்று, அவரது மகன் விஜயேந்திரா பெருமிதத்துடன் கூறினார்.
பா.ஜ., முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் 50 ஆண்டு கால அரசியல் பயணத்தை கொண்டாடும் கையில், சித்ரதுர்காவில் நாளை மாநாடு நடக்க உள்ளது. இம்மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கிறார்.
மாநாடு நடக்கும் இடத்தில் செய்யப்பட்டு உள்ள ஏற்பாடுகளை, எடியூரப்பாவின் 2 வது மகனும், கர்நாடக பா.ஜ., தலைவருமான விஜயேந்திரா நேற்று ஆய்வு செய்தார்.
பின், அவர் கூறியதாவது:
போராட்ட குணத்தின் மூலம் கர்நாடகாவில் பா.ஜ.,வை முன்னாள் முதல்வர் எடியூரப்பா கட்டி எழுப்பினார். அவரது அரசியல் போராட்ட பாதை என்னை போன்ற இளம் அரசியல்வாதிகளுக்கு உத்வேகமாக அமைந்து உள்ளது. சித்ரதுர்கா மாநாட்டில் 10 லட்சம் பேர் பங்கேற்பர்.
நேரமின்மையால் பலரை அழைக்க முடியவில்லை. மடாதிபதிகள் தலைமையில் மாநாடு சிறப்பாக நடக்கும். கர்நாடகாவில் மீண்டும் பா.ஜ.,வை ஆட்சிக்கு கொண்டு வருவது எங்கள் குறிக்கோள்.
இவ்வாறு அவர் கூறினார்.
