பிடதி டவுன்ஷிப் குறித்து பகிரங்க விவாதம் குமாரசாமிக்கு சிவகுமார் விடுத்தார் அழைப்பு
பிடதி டவுன்ஷிப் குறித்து பகிரங்க விவாதம் குமாரசாமிக்கு சிவகுமார் விடுத்தார் அழைப்பு
ADDED : மே 21, 2026 02:18 AM

பெங்களூரு: பிடதி டவுன்ஷிப் குறித்து பகிரங்க விவாதம் நடந்த, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமிக்கு, துணை முதல்வர் சிவகுமார் அழைப்பு விடுத்து உள்ளார்.
பெங்களூரு தெற்கு மாவட்டம் பிடதியில் டவுன்ஷிப் அமைக்கும் பணிக்காக, நிலம் கையகப்படுத்துவதற்கு, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன், துணை முதல்வர் சிவகுமார் பெங்களூரில் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சிவப்பு மண்டலம் பின், அவர் அளித்த பேட்டி:
பிடதியில் டவுன்ஷிப் அமைக்க நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினேன். நிவாரண தொகையுடன், வீட்டு மனையும் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
சட்டத்திற்கு உட்பட்டு என்ன உதவி செய்ய முடியுமோ அதை செய்வதாக கூறி உள்ளேன். நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு, ஜூன் முதல் வாரத்தில் இருந்து இழப்பீடு தொகை கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்.
பிடதி டவுன்ஷிப் திட்டத்தை கொண்டு வந்தது நான் இல்லை. மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, கர்நாடக முதல்வராக இருந்த போது, இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது.
திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு டி.எல்.எப்., நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் எங்களால் திட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியம் இல்லை என்று வாபஸ் பெற்று விட்டனர்.
டவுன்ஷிப் அமைக்க நிலம் கண்டறியப்பட்ட இடம் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது. அதாவது இந்த இடத்தில் யாரும் நிலம் வாங்கவோ, விற்கவோ முடியாது என்று சட்டம் இயற்றப்பட்டது.
இதை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றனர். விவசாயிகள் நம்பிக்கையை பெற்று திட்டத்தை துவங்கி உள்ளோம்.
அந்தஸ்து என்ன? பிடதியை பெங்களூரு தெற்கு மாவட்டத்தில் சேர்த்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். விவசாயிகள் தங்கள் நிலத்தை அவசரப்பட்டு விற்க வேண்டாம் என்று கூறி இருந்தேன். தற்போது நிலத்தின் மதிப்பு அதிகரித்து இருப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
பிடதியில் டவுன்ஷிப் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் குமாரசாமியுடன், பகிரங்க விவாதம் நடந்த தயாராக உள்ளேன். தேதி, இடத்தை அவரே நிர்ணயிக்கட்டும். இரும்பு பொருட்கள் விலை, 1 டன்னுக்கு, 5,000 ரூபாய் உயர்ந்து உள்ளது. குமாரசாமி தான் அந்த துறையின் அமைச்சர். விலையை குறைக்க அவர் நடவடிக்கை எடுக்கட்டும்.
காங்கிரசில், 137 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தும் எதுவும் செய்யவில்லை என்று, குமாரசாமி மகன் நிகில் கூறி உள்ளார். அவருக்கு பதில் அளிக்க நான் விரும்பவில்லை. அவரது அந்தஸ்து என்ன என்று எனக்கு தெரியாது. அவர் கட்சியின் தலைவர் ஆகட்டும். பின், அவரது குற்றச்சாட்டுக்கு பதில் கொடுக்கிறேன்.
அன்பு மழை மத்தியில், பா.ஜ., மீண்டும் வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமர் ஆனால் நாட்டை விட்டு செல்வதாக, தேவகவுடா கூறினார். இப்போது மோடியுடன் கூட்டணி வைத்து உள்ளார். காலத்திற்கு ஏற்ப மாறுகின்றனர்.
பிடதி டவுன்ஷிப் திட்டம் தொடர்பாக ராகுலுக்கு, தேவகவுடா கடிதம் எழுதி உள்ளார். ராகுல் ஆட்சியில் இல்லை. அவருக்கு எதற்காக கடிதம் எழுதி உள்ளார். என்னை, 'ரியல் எஸ்டேட் மாபியா' என தேவகவுடா கூறுகிறார். யார் உண்மையான மாபியா என்பது குறித்து விவாதிக்க அவர்கள் வரட்டும். திடீரென சித்தராமையா மீது தேவகவுடா அன்பு மழை பொழிகிறார். அதன் பின்னணி தெரியவில்லை.
தேவகவுடா குடும்பம் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் ஏன் இங்கு வந்து நிலம் வாங்கி உள்ளனர். ராம்நகர் மாவட்டத்தின் பெயரை பெங்களூரு தெற்கு என மாற்றிய பின், நிலத்தின் மதிப்பு உயர்ந்து உள்ளது.
இதை தடுக்க குமாரசாமி முயற்சி செய்தார். பிடதி டவுன்ஷிப் அமைக்க நிலம் கொடுத்தவர்களுக்கு நல்ல விலையுடன் இழப்பீடு நிர்ணயித்து உள்ளேன்.
முடிந்த அளவுக்கு விவசாயிகள் நிலத்தை சேமித்து வைத்து கொள்ளுங்கள். பிடதி வரை மெட்ரோ வர வாய்ப்பு உள்ளது. குடிநீர் வாரியத்தின் கீழ் காவிரி தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
