/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சோனியா, ராகுல், பிரியங்காவுடன் சிவகுமார் சந்திப்பு முதல்வர் பதவி பிரச்னை இறுதிக்கட்டத்தை எட்டுகிறது
/
சோனியா, ராகுல், பிரியங்காவுடன் சிவகுமார் சந்திப்பு முதல்வர் பதவி பிரச்னை இறுதிக்கட்டத்தை எட்டுகிறது
சோனியா, ராகுல், பிரியங்காவுடன் சிவகுமார் சந்திப்பு முதல்வர் பதவி பிரச்னை இறுதிக்கட்டத்தை எட்டுகிறது
சோனியா, ராகுல், பிரியங்காவுடன் சிவகுமார் சந்திப்பு முதல்வர் பதவி பிரச்னை இறுதிக்கட்டத்தை எட்டுகிறது
ADDED : பிப் 13, 2026 05:32 AM

பெங்களூரு: கர்நாடகாவில் முதல்வர் பதவிக்கான பிரச்னை, 'கிளைமாக்ஸ்' கட்டத்தை எட்டிவிட்டது என்றே சொல்ல கூடிய சூழ்நிலை உருவாகி உள்ளது. டில்லி சென்ற துணை முதல்வர் சிவகுமார், சோனியா, ராகுல், பிரியங்காவை சந்தித்து, தனக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் பதவி விவகாரத்தால், மாநில அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. இரண்டு நாட்களுக்கு முன் டில்லி சென்ற சிவகுமார், அங்கேயே தங்கி இருந்து, முதல்வர் பதவியை பெற காய் நகர்த்த ஆரம்பித்தார். கட்சியின் தேசிய பொது செயலர் பிரியங்காவை, முதலில் சந்தித்து பேசினார்.
'கட்சிக்காக கடுமையாக உழைத்து உள்ளேன். சிறைக்கு சென்றுள்ளேன். கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர இரவும், பகலும் உழைத்து உள்ளேன். எனது உழைப்புக்கு வெகுமதி கேட்கிறேன். என்னை சந்திக்க, உங்கள் சகோதரர் ராகுல் நேரம் கொடுப்பது இல்லை' என்று, தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.
'எதற்கும் கவலைப்படாதீர்கள்; ராகுலை சந்திக்க ஏற்பாடு செய்து கொடுக்கிறேன்' என்று, பிரியங்கா ஆறுதல்படுத்தி உள்ளார். நேற்று முன்தினம் இரவு மல்லிகார்ஜுன கார்கே, வேணுகோபாலை, சிவகுமாரும், அவரது சகோதரர் சுரேஷும் சந்தித்து பேசினர்.
அஹிந்தா ஓட்டு இந்நிலையில், டில்லியில் உள்ள 10 ஜன்பத் வீட்டில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா, ராகுல், பிரியங்காவை, சிவகுமார் நேற்று காலை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் பூகேஷ் பாகேலும் உடன் இருந்தார். ராகுலுடன் தனியாக அரை மணி நேரம் ஆலோசனை நடத்திய சிவகுமார், முதல்வராக தனக்கு உள்ள உரிமையை வெளிப்படுத்தி உள்ளார்.
'சித்தராமையாவை பதவியில் இருந்து இறக்கினால், அஹிந்தா சமூக ஓட்டுகள் காங்கிரஸ் கையை விட்டு போய் விடுமோ' என்று ராகுல் கேட்ட போது, அதற்கு பதில் அளித்த சிவகுமார், 'அப்படி எதுவும் நடக்காது. மேலிட உத்தரவை மீறி தலைவர்கள் யாரும் செயல்பட மாட்டார்கள். முதல்வர் பதவிக்காக நிலவும் பிரச்னையால், தொண்டர்கள் மத்தியில் குழப்பம் உள்ளது.
'வரும் 2028 தேர்தலிலும் கட்சியை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவது எனது பொறுப்பு. வாக்குறுதி அளித்தபடி சித்தராமையாவை, முதல்வர் பதவி விட்டு கொடுக்க சொல்லுங்கள்' என்று, சிவகுமார் கோரிக்கை வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.
1,000 நாட்கள் இந்த சந்திப்புக்கு பின், சோனியா வீட்டின் முன்பு சிவகுமார் கூறுகையில், ''எங்கள் கட்சியின் மேலிட தலைவர்களை சந்தித்து பேசினேன். என்ன பேசினேன் என்று உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. அரசியல் குறித்து தெருவில் நின்று பேச முடியாது. டில்லிக்கு வேடிக்கை பார்க்க வரவில்லை. அரசியல் செய்ய தான் வந்து உள்ளேன். காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும்,'' என்றார்.
பின், கர்நாடக பவனில் சிவகுமார் அளித்த பேட்டி:
டில்லிக்கு வந்தால் மேலிட தலைவர்களை சந்திக்காமல் செல்ல வேண்டுமா?. ராகுல், பிரியங்கா, கார்கே, வேணுகோபால், சுர்ஜேவாலா, கர்நாடக அரசின் டில்லி சிறப்பு பிரதிநிதி ஜெயசந்திரா ஆகியோரை சந்தித்தேன். அரசியல் பற்றி தான் பேசினோம். அசாம் மாநில தேர்தல் குறித்து விவாதித்தோம்.
முதல்வர் பதவி குறித்து பேச யதீந்திரா என்ன எங்கள் கட்சி மேலிடமா; அவரது வார்த்தைக்கு ஏன் மதிப்பு கொடுக்க வேண்டும்?
கட்சிக்குள் மோதல் இல்லை. பா.ஜ.,வில் தான் உள்ளது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 1,000 நாட்கள் ஆகி உள்ளது. ஆறாவது வாக்குறுதியாக நில உரிமை பத்திரம் வழங்குகிறோம். இது அரசின் லட்சிய திட்டம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சோனியா, ராகுல், பிரியங்காவை, சிவகுமார் சந்தித்த நிலையில், பதவியை தக்க வைத்து கொள்ள சித்தராமையா, தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த ஆரம்பித்து உள்ளார். விரைவில் அவரும் டில்லி செல்ல வாய்ப்பு உள்ளது. இதனால் வரும் நாட்களில், கர்நாடக அரசியலில் பரபரப்புக்கு எந்த பஞ்சமும் இருக்காது.

