/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கவர்னருக்கு காலை காட்டியிருக்க வேண்டுமா? ஹரிபிரசாத்தின் பேச்சால் பா.ஜ., கொந்தளிப்பு
/
கவர்னருக்கு காலை காட்டியிருக்க வேண்டுமா? ஹரிபிரசாத்தின் பேச்சால் பா.ஜ., கொந்தளிப்பு
கவர்னருக்கு காலை காட்டியிருக்க வேண்டுமா? ஹரிபிரசாத்தின் பேச்சால் பா.ஜ., கொந்தளிப்பு
கவர்னருக்கு காலை காட்டியிருக்க வேண்டுமா? ஹரிபிரசாத்தின் பேச்சால் பா.ஜ., கொந்தளிப்பு
ADDED : ஜன 30, 2026 06:31 AM

பெங்களூரு: மேல்சபையில் பா.ஜ., உறுப்பினர் அருண் சங்கரமூர்த்தி, 'காங்கிரசார் கவர்னரை நோக்கி விரல் நீட்டி பேசியது சரியல்ல' என, அதிருப்தி தெரிவித்ததால், 'காலை காட்டியிருக்க வேண்டுமா' என, காங்., - எம்.எல்.சி., ஹரிபிரசாத் கூறியது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பாண்டின் முதல் சட்டசபை கூட்டத்தில், கவர்னர் தாவர்சந்த் கெலாட் நிகழ்த்திய உரைக்கு மேல்சபையில் அமைச்சர் போசராஜு கண்டனம் தெரிவித்தார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என, எதிர்க்கட்சிகள் பிடிவாதம் பிடிக்கின்றன.
இதனால், இரண்டு நாட்களாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இடையே காரசார வாக்குவாதம், கூச்சல், குழப்பம் ஏற்படுவதால் கூட்ட நடவடிக்கை பாதித்து உள்ளது. எதிர்க்கட்சிகள் தர்ணாவில் ஈடுபட்டுள்ளன.
தர்ணா நேற்று காலை சபை கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேல்சபை தலைவரின் இருக்கை முன் சென்று, தர்ணாவில் ஈடுபட்டனர்.
மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி: கூட்டத்தொடர் நடக்க வேண்டும். அவ்வப்போது இதுபோன்று இடையூறு செய்வது சரியல்ல. கேள்வி நேரம், கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு, முதல்வர் பதில் அளிக்க வேண்டும். உறுப்பினர்கள் தர்ணாவை திரும்ப பெற்று, அவரவர் இருக்கைக்கு திரும்புங்கள்.
எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி: நாங்கள் சபைக்கு முட்டுக்கட்டை போடவில்லை. சபை நல்ல முறையில் நடக்க வேண்டும் என, நாங்களும் விரும்புகிறோம். ஆனால் அரசு பிடிவாதம் பிடிக்கிறது. கவர்னரை அவமதித்த போசராஜு மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது வருத்தம் தெரிவிக்க வேண்டும்.
பசவராஜ் ஹொரட்டி: அமைச்சர் போசராஜு பேசியதை சபை குறிப்பில் இருந்து நான் அகற்றியுள்ளேன். இந்த விஷயம் அத்துடன் முடிந்துவிட்டது என, கருத வேண்டும். மீண்டும், மீண்டும் அதுபற்றியே விவாதிக்க வேண்டாம். கூட்டம் நடக்க அனைவரும் ஒத்துழைப்பு தாருங்கள்.
அமைச்சர் போசராஜு: ஆலோசனை கமிட்டி கூட்டத்தில் நடந்த பேச்சின்படி கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் குறித்து விவாதிக்க, வாய்ப்பளிப்பதாக எதிர்க்கட்சி தலைவர் கூறினார். இப்போது முன்னுக்கு பின், முரணாக பேசுகிறார். நான் பேசியது நீக்கப்பட்டது. ஒரே விஷயத்தை வைத்து கொண்டு, கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்துவது சரியா.
அப்போது, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் இடையே, சிறிது நேரம் காரசார வாக்குவாதம் நடந்தது.
பசவராஜ் ஹொரட்டி: சபையை நடத்தவே எனக்கு வெறுப்பாக இருக்கிறது. இது போன்று எப்போதும் நடந்தது இல்லை. எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற வரைமுறை, உறுப்பினர்களிடம் இல்லை. பல முறை நான் மன்றாடியும், நீங்கள் இடையூறு செய்கிறீர்கள் என்றால், வேறு என்ன மொழியில் நான் உங்களுக்கு கூறுவது. என் பொறுமைக்கும் எல்லை உள்ளது.
பா.ஜ., - ரவி: சபையின் காங்கிரஸ் குழு தலைவர், கவர்னரை அவமதித்துள்ளார். அவர் கூறிய வார்த்தைகளை சபை குறிப்பில் இருந்து நீக்கினால், அனைத்தும் முடிந்துவிடாது; அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்.
காங்கிரஸ் தலைமை கொறடா சலீம்: சபை நடக்க கூடாது என, பா.ஜ.,வினர் விரும்புகின்றனர். சபையின் விதிமுறை புத்தகத்தை கிழித்து போட்ட எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமியை, சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியினர், வாக்குவாதம் நடக்கும் போது, பா.ஜ., உறுப்பினர் ரவி, 'சபையின் கூட்டத்துக்கு பாதிப்பு ஏற்பட, காங்கிரஸ் உறுப்பினர் ஹரிபிரசாத் காரணம். அவரை சபையில் இருந்து வெளியேற்றுங்கள். அவர் கவர்னரை கை காட்டி அவமதித்தார்' என்றார்.
அப்போது ஹரிபிரசாத், 'கையை காட்டாமல், காலை காட்டியிருக்க வேண்டுமா' என கேள்வி எழுப்பினார். இவரது வார்த்தைகள் எதிர்க்கட்சியினரை கோபப்படுத்தியது. ஹரிபிரசாத்தை சபையில் இருந்து வெளியேற்றுங்கள் என, வலியுறுத்தினர். கூச்சல், குழப்பத்தால் சபையை நடத்த முடியாத நிலை ஏற்பட்டதால், சபை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.

