அரசு நிர்வாகத்தின் வேலையை நாங்கள் செய்யணுமா? ஐகோர்ட் காட்டம்
அரசு நிர்வாகத்தின் வேலையை நாங்கள் செய்யணுமா? ஐகோர்ட் காட்டம்
ADDED : செப் 19, 2026 02:24 AM
பெங்களூரு: 'அரசு நிர்வாகத்தின் வேலையை நாங்கள் செய்ய வேண்டுமா...' என, குடிநீர் பிரச்னையில், அரசுக்கு எதிராக, கர்நாடக உயர் நீதிமன்றம் சாட்டையை சுழற்றியுள்ளது.
துமகூரின் சிரா தாலுகாவில் நிலவும் கடும் குடிநீர் பற்றாக்குறை குறித்து, ஓய்வுபெற்ற இன்ஜினியர் ஜெயராமையா உள்ளிட்டோர் தாக்கல் செய்த பொது நல மனுவை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனு சிவராமன், விவேகானந்தா அமர்வு நேற்று விசாரித்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் ரவி வர்ம குமார் வாதிடுகையில், ''சிரா தாலுகாவில் கடும் குடிநீர் பற்றாக்குறை உள்ளது.
மக்கள் 1,000 அடி ஆழத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றின் தண்ணீரை நம்பியுள்ளனர். அந்த நீரில், புளோரைடு அதிக அளவில் உள்ளது. இந்த தண்ணீரை குடிக்கும் தாய்மார்களின் தாய்ப்பாலிலும் புளோரைடு கலந்திருப்பது கவலைக்குரிய விஷயம்.
''ஐந்து லட்சம் மக்கள் தினமும் குடிநீருக்காக போராடுகின்றனர். குடிநீர் விஷயத்தில் அரசால் சமர்ப்பிக்கப்பட்ட நிலை அறிக்கை முழுமையற்றதாக உள்ளது. தண்ணீர் விஷயத்தில் அரசு அலட்சியமாக உள்ளது,'' என்றார்.
அரசு தரப்பு வக்கீல்கள் கூறுகையில், 'சிரா தாலுகாவில், 17 கிராமங்களில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது.
ஆழ்துளை கிணறுகளை வாடகைக்கு எடுத்து 10 கிராமங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. தண்ணீரை ஆய்வு செய்த பின் வினியோகம் செய்யப்படுகிறது' என்றனர்.
இந்த பதிலை கேட்டு கடும் கோபம் அடைந்த நீதிபதிகள், 'அரசு நிர்வாகத்தின் வேலையை நீதிமன்றம் செய்ய வேண்டுமா... மக்களுக்கு குடிநீர் வழங்குவது அரசின் அடிப்படை பொறுப்பு. எவ்வளவு தண்ணீர் தேவைப்படுகிறது என கணக்கிடுவது நிர்வாகத்தின் வேலை.
'சிறிய பிரச்னைகளுக்கு கூட மக்கள், நீதிமன்றம் வருவது துரதிர்ஷ்டவசமானது. சிரா தாலுகாவில் தண்ணீர் தேவை, அவசரகால நடவடிக்கைகள் குறித்த முழு விபரங்களை, வரும் 23ம் தேதி நீதிமன்றத்தில் அரசு சமர்ப்பிக்க வேண்டும்' என்றனர்.
