ADDED : செப் 19, 2026 02:24 AM
தாவணகெரே: குடி போதையில், தன் தாயை சுவற்றில் மோதி கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.
தாவணகெரே நகரின் ஆரனேகல்லு கிராமத்தில் வசித்தவர் பிரேமா, 60. இவரது மகன் ஆனந்த், 30. பிரேமாவின் கணவர் பல ஆண்டுகளுக்கு முன் காலமானதால், கூலி வேலை செய்து, திருமணமாகாத மகனை காப்பாற்றி வந்தார்.
சமீப நாட்களாக, ஆனந்த் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். தினமும் போதையில் வீட்டுக்கு வந்து, தாயுடன் தகராறு செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு, போதையில் வீட்டுக்கு வந்த அவர், தாயுடன் தகராறில் ஈடுபட்டார். கோபமடைந்த ஆனந்த், தாயின் தலையை பிடித்து, சுவற்றில் வேகமாக மோதினார். இதில் பலத்த காயமடைந்த பிரேமா, சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
தாய் இறந்ததை பார்த்து பயந்த ஆனந்த், அங்கிருந்து தப்பியோடினார். நேற்று காலை நீண்ட நேரமாகியும், பிரேமா வெளியே வராததால், அப்பகுதியினர் வீட்டுக்குள் சென்று பார்த்த போது, அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரிந்தது.
தகவல் அறிந்து, அங்கு வந்த ஹதடி போலீசார், பிரேமாவின் உடலை மீட்டு, மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அக்கம், பக்கத்தினரிடம் விசாரித்த போது, தாய்க்கும், மகனுக்கும் சண்டை நடந்ததை கூறினர். தலைமறைவாக இருந்த ஆனந்தை, போலீசார் கைது செய்தனர்.
