ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு கட்சி, அரசு நிலவரம் குறித்து பேச்சு
ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு கட்சி, அரசு நிலவரம் குறித்து பேச்சு
ADDED : செப் 12, 2026 04:33 AM
- நமது நிருபர் -
முன்னாள் முதல்வர் சித்தராமையா, அடுத்த தேர்தலில் போட்டியிடுவது இல்லை என அறிவித்ததற்கு, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், ஆட்சேபனை தெரிவித்துள்ளார். இதனால் கட்சியின் 'இமேஜ்' பாதிக்கும் என கருத்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் சித்தராமையா, டில்லியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலை, நேற்று சந்தித்தார். இருவரும் பல்வேறு விஷயங்கள் குறித்து, ஆலோசனை நடத்தினர். அப்போது எட்டு ஆண்டுகள், முதல்வராக இருக்க தனக்கு வாய்ப்பளித்ததற்கு, நன்றி தெரிவித்தார்.
பின்னடைவு அடுத்த தேர்தலில் போட்டியிடுவது இல்லை என, மாண்டியாவில் சித்தராமையா கூறியதற்கு, ராகுல் காரணம் கேட்டார். 'நீங்கள் தேர்தலில் போட்டியிடுவதில்லை என அறிவித்ததால், கட்சியின் இமேஜ் பாதிக்கும். கட்சிக்கும் பின்னடைவு ஏற்படலாம். உங்களை போன்ற மூத்த தலைவர்கள், கட்சிக்கு மிகவும் அவசியம்' என அறிவுரை கூறியுள்ளார்.
இதற்கு விளக்கம் அளித்த சித்தராமையா, 'தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று தான் கூறினேனே தவிர, அரசியலில் இருந்து விலகமாட்டேன்' என்றார். இனிமேல் இது போன்று, பேச வேண்டாம் எனவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
கட்சியின் தேசிய கொள்கைகள் குறித்து, தன் கருத்துகளை தெரிவித்த சித்தராமையா, கர்நாடக அரசியல் நிலவரம், அமைச்சரவை விரிவாக்கம் உட்பட, கட்சி தொடர்பான விஷயங்களையும், ராகுலின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
குறிப்பாக, அமைச்சரவை மாற்றி அமைத்தது, விரிவாக்கத்தின் போது, தான் பரிந்துரைத்த பெயர்களை ஒதுக்கி தள்ளி, மற்றவர்களுக்கு முக்கியத்துவம் அளித்தது; தன் கவனத்துக்கு கொண்டு வராமல், காயத்ரி சாந்தே கவுடாவின் பெயரை, உத்தேச அமைச்சர்கள் பட்டியலில் சேர்த்தது குறித்தும் அதிருப்தி தெரிவித்ததாக கூறப்படுகிறது.
கர்நாடக ஆட்சி நிலவரம் குறித்தும், அவர் புகார் அளித்துள்ளார்.
'முதல்வர் சிவகுமார், ஆட்சியில் அதிவேகமாக முன்னோக்கி நடக்கிறார். மாநிலத்தின் பொருளாதார சூழ்நிலையை பொருட்படுத்தாமல், சில முடிவுகளை எடுக்கிறார். இது, வரும் காலத்தில் மாநில வளர்ச்சிக்கும், கட்சிக்கும் பாதிப்பை ஏற்படுத்த கூடும்' என குமுறியதாக, தகவல் வெளியாகியுள்ளது.
மேல்சபை மேல்சபையில், ஐந்து நியமன உறுப்பினர்கள் இடங்கள், காலியாக உள்ளன. இதில் தன் ஆதரவாளர்களுக்கு வாய்ப்பளிப்பது குறித்தும், வேண்டுகோள் விடுத்துள்ளார். கார்ப்பரேஷன், வாரியங்கள் நியமனத்திலும், தன் ஆதரவாளர்களுக்கு அநியாயம் நடக்ககூடாது.
அஹிந்தா சமுதாயத்தை ஒருங்கிணைக்க, தான் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு, மாநில தலைவர்கள் முட்டுக்கட்டை போடக்கூடாது என, உத்தரவிடும்படி, ராகுலிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த சமுதாயத்தை பலப்படுத்தினால், கட்சிக்கு தான் லாபமாக இருக்கும். தனிப்பட்ட முறையில், எனக்கு எந்த அனுகூலமும் இல்லை. ஆனால் சிலர், தவறான கண்ணோட்டத்தால், என் முயற்சிக்கு இடையூறு விளைவிக்கின்றனர்.
காங்கிரஸ் சார்பில் நிகழ்ச்சி நடத்தும்படி, நெருக்கடி கொடுப்பது சரியல்ல. இதனால் கட்சியின் ஓட்டு வங்கிக்கு பாதிப்பு ஏற்படும் என, கூறியதாக, தகவல் வெளியாகியுள்ளது.
