கே.பி.எஸ்.சி., நடத்திய பஞ்., அதிகாரி தேர்விலும் முறைகேடு! : ஏராளமானோரிடம் பணம் வாங்கியது அம்பலம்
கே.பி.எஸ்.சி., நடத்திய பஞ்., அதிகாரி தேர்விலும் முறைகேடு! : ஏராளமானோரிடம் பணம் வாங்கியது அம்பலம்
ADDED : செப் 12, 2026 04:32 AM

கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக அரசு பணியாளர் தேர்வாணையம், அரசின் பல துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப தேர்வுகளை நடத்துகிறது. இந்த ஆணையம் நடத்திய கால்நடை மருத்துவ அதிகாரி தேர்வில் முறைகேடு நடந்தது பற்றி, சி.ஐ.டி., விசாரிக்கிறது.
தற்காலிக பட்டியல் இந்நிலையில், தற்போதைய கர்நாடக உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே, இதற்கு முன், கிராம பஞ்சாயத்து துறை அமைச்சராக இருந்த போது, கே.பி.எஸ்.சி., நடத்திய உதவி செயற்பொறியாளர் தேர்வில் முறைகேடு நடந்ததாகவும், அமெரிக்கா சென்று திரும்பியதும், முறைகேடுகளை ஆவணங்களுடன் வெளியிடுவதாகவும், மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கூறியிருந்தார்.
குமாரசாமி கூறியது போல, தேர்வில் முறைகேடு நடந்தது உண்மை தான் என்பது தற்போது தெரிந்துள்ளது.
கர்நாடக அரசின் கிராம மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் காலியாக இருந்த, 24 உதவி செயற்பொறியாளர் கிரேடு 1 பணியிடங்களை நிரப்ப, 2023ம் ஆண்டு அரசு அறிவிப்பு வெளியிட்டது.
கடந்த 2024ம் ஆண்டு கே.பி.எஸ்.சி., தேர்வு நடத்தியது. தேர்வு முடிந்த சில மாதங்களில் பணிக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் தற்காலிக பட்டியலை அரசு வெளியிட்டது.
கார்பன் நகல் இந்த தேர்வில் தோல்வி அடைந்த ஒருவர், தேர்வில் முறைகேடு செய்து சிலர் வெற்றி பெற்று இருப்பதாக, கே.பி.எஸ்.சி.,யில் புகார் அளித்தார்.
இதுகுறித்து, அப்போதயை கே.பி.எஸ்.சி., செயலர் லதாகுமாரி, கே.பி.எஸ்.சி., உறுப்பினர் சாந்தா ஹொசமணி தலைமையில் விசாரணைக்கும் உத்தரவிட்டு இருந்தார். முதற்கட்ட விசாரணையில், 10 பேர் தேர்வில் முறைகேடு செய்தது தெரிந்தது.
அந்த, 10 பேரும் தேர்வு எழுதிய அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் சரியாக வேலை செய்யவில்லை என்பதும் தெரியவந்தது.
மை வித்தியாசம் முறைகேடு செய்து தேர்வு எழுதிய, 10 பேரை விசாரணைக்கு ஆஜராக கே.பி.எஸ்.சி., 'சம்மன்' அனுப்பியது. இதில் நான்கு பேர் விசாரணைக்கு ஆஜரான போது, விடைத்தாளின் கார்பன் நகலை எடுத்து வரவில்லை. எங்கோ தொலைந்து விட்டதாக கூறினர்.
மற்றவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட, விடைத்தாளின் கார்பன் நகல், எப்.எஸ்.எல்., எனும் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அந்த ஆய்வகத்தின் அறிக்கை தற்போது கிடைத்துள்ளது.
அந்த அறிக்கையில், முறைகேடு செய்து தேர்வில் வெற்றி பெற்ற, 10 பேர், தேர்வின் போது பயன்படுத்திய பேனா மைக்கும், கார்பன் நகலில் உள்ள பேனா மைக்கும் வித்தியாசம் உள்ளது. பாதுகாப்பு அறையிலோ அல்லது வேறு இடத்திலோ கார்பன் தாள்களை பயன்படுத்தி, அசல் வினாத்தாளில் விடுபட்ட விடைகளில் திருத்தி, மதிப்பெண்களை கூட்டியது பற்றியும் குறிப்பிட்டுள்ளது.
இதில் இன்னொரு அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால், அறிக்கை வரும் முன்பே, தற்காலிக பட்டியலில் இடம்பெற்றிருந்த 24 பேரையும் அரசு பணியில் அமர்த்தியது.
அதாவது, முறைகேடு செய்து வெற்றி பெற்றோரும், தற்போது பணியில் உள்ளனர். இது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.
முறைகேடு செய்தவர்களிடம் இருந்து வேலையை பறிப்பதுடன், மறுதேர்வு நடத்த வேண்டும் என்றும், இந்த வழக்கையும் சி.ஐ.டி.,யிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
தவிர, முறைகேடு செய்து பணியில் சேர்ந்தோரிடம், ஒரு கோடி ரூபாய் முதல் மூன்று கோடி ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் வரும் நாட்களில் விஸ்வரூபம் எடுக்கவும் வாய்ப்புள்ளது.
