சமர்த் வெற்றி பெற்றால் என் பலம் அதிகரிக்கும் தாவணகெரே பிரசாரத்தில் சித்தராமையா பேச்சு
சமர்த் வெற்றி பெற்றால் என் பலம் அதிகரிக்கும் தாவணகெரே பிரசாரத்தில் சித்தராமையா பேச்சு
ADDED : ஏப் 02, 2026 03:07 AM

தாவணகெரே: ''தாவணகெரே தெற்கு வேட்பாளர் சமர்த் வெற்றி பெற்றால், எனது பலம் அதிகரிக்கும்,'' என்று, பிரசாரத்தின் போது முதல்வர் சித்தராமையா பேசினார்.
தாவணகெரே தெற்கு காங்கிரஸ் வேட்பாளர் சமர்த்தை ஆதரித்து, நாகனுார், சரம்கொண்டஹள்ளி, ஹடடி கிராமங்களில் முதல்வர் சித்தராமையா நேற்று பிரசாரம் செய்தார்.
அவர் பேசியதாவது:
தாவணகெரே தெற்கில் சமர்த்துக்கு சீட் கொடுத்ததன் மூலம், குடும்ப அரசியலை காங்கிரஸ் ஆதரிப்பதாக, எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டு கூறுகின்றனர். அப்படி என்றால் முன்னாள் முதல்வர் எடியூரப்பா மகன்கள், முன்னாள் பிரதமர் தேவகவுடா மகன்கள், பேரன்கள் தேர்தலில் போட்டியிடவில்லையா. அது குடும்ப அரசியல் இல்லையா?
எம்.எல்.ஏ., ஆகும் அனைத்து தகுதியும் சமர்த்திடம் உள்ளது. அவர் படித்த இளைஞர். வெற்றி பெற்றால் அடித்தட்டு மக்களுக்காக சட்டசபையில் குரல் கொடுப்பார். தாவணகெரே மாவட்டத்திற்கு சமர்த் தாத்தா சாமனுார் சிவசங்கரப்பா அளித்த பங்களிப்பு அளப்பரியது. சமர்த் வெற்றி பெற்றால் எனது பலம் அதிகரிக்கும். சிவசங்கரப்பா ஆன்மா சாந்தி அடைய வேண்டும் என்றால், அவரது பேரன் வெற்றி பெற வேண்டும்.
வாக்குறுதி திட்டங்களை நிறைவேற்ற தாவணகெரே மாவட்டத்திற்கு 538 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. எங்கள் திட்டங்களை பா.ஜ., எதிர்க்கிறது. கடந்த 2013 சட்டசபை தேர்தலில் நாங்கள் கொடுத்த 165 வாக்குறுதிகளில் 158ஐ நிறைவேற்றி காட்டினோம்.
இப்போது ஐந்து வாக்குறுதி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி உள்ளோம். மகாத்மா காந்தி, அம்பேத்கர், பசவண்ணர் விருப்பப்படி எங்கள் அரசு செயல்படுகிறது. அனைத்து தரப்பு மக்களையும் பொருளாதார ரீதியாக முன்னேற்றி வருகிறோம்.
'கடனின் ராமையா' என்று எதிர்க்கட்சியினர் கிண்டல் செய்கின்றனர். நான் 'அன்ன ராமையா'. ஏழைகள் பசியுடன் இருக்க கூடாது என்பதால், அன்ன பாக்யா திட்டத்தை கொண்டு வந்தேன். பொய் தான் பா.ஜ., தலைவர்களின் வீட்டு கடவுள். என் மீது குற்றச்சாட்டு வைக்கும் எதிர்க்கட்சி தலைவர்கள், சட்டசபையில் வாய் திறப்பதே இல்லை.
கர்நாடக அரசை விட மத்திய அரசு அதிக கடன் வாங்கி உள்ளது. நரேந்திர மோடி பிரதமர் ஆன பின், நாட்டின் கடன் பல மடங்கு உயர்ந்து உள்ளது. நமது மாநிலத்தின் வெள்ளை அறிக்கையை வெளியிடும்படி, விஜயேந்திரா கேட்கிறார். சட்டசபையில் விளக்கமாக பதில் அளித்து உள்ளேன்.அமைச்சர் ஜமீர் அகமது கான் இங்கு பிரசாரம் செய்ய வருவார்.
இவ்வாறு அவர் பேசினார்.
