ADDED : ஜூன் 04, 2026 11:13 PM
பெங்களூரு: பெங்களூரில் வரும், 30ம் தேதி முதல், எஸ்.ஐ.ஆர்., பணிகள் துவங்கப்பட உள்ளன.
ஜி.பி. ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் வெளியிட்டுள்ள அறிக்கை:
இம்மாதம், 30ம் தேதி முதல், ஜி.பி.ஏ., ஊழியர்கள் வீடு, வீடாக சென்று, எஸ்.ஐ.ஆர்., பணிகளை மேற்கொள்வர்.
இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும். பெறப்பட்ட தரவுகள் சரிபார்க்கப்பட்டு, ஒப்பிட்டு பார்க்கப்படும். பின், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியி டப்படும்.
தகுதியுள்ள ஒரு வாக்காளர் கூட எஸ்.ஐ.ஆர்.,ரில் விடுபட்டு விடக்கூடாது. அதே சமயம், தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்கள் கட்டாயமாக நீக்கப்படும். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அனைத்து பணிகளும் நடக்கும். அனைத்து தரவுகளும் 2025, 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியல்களுடன் ஒப்பிடப்படும். எஸ்.ஐ.ஆர்., பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பங்கேற்பதை தேர்தல் ஆணையம் அனுமதி அளிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஒவ்வொரு ஓட்டுச்சாவடிக்கும் ஒரு ஓட்டுச்சாவடி நிலை முகவரை நியமித்து, அதற்கான பட்டியலை உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். ஒலிபெருக்கிகள் வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்படும். ஆட்சேபனை தெரிவிக்க 05.08.2026 முதல் 04.09.2026 வரை அவகாசம் வழங்கப்படும். ஆட்சேபனைகள் மீது தீர்வு காண அக்டோபர் மாதம் 3ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் அக்டோபர் 10ம் தேதி வெளியிடப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
