'மாஜி' எம்.எல்.சி., கடத்தல் கேரளாவில் நால்வர் கைது
'மாஜி' எம்.எல்.சி., கடத்தல் கேரளாவில் நால்வர் கைது
ADDED : ஜூன் 04, 2026 11:13 PM
பெங்களூரு: முன்னாள் எம்.எல்.சி., தயானந்த ரெட்டியை கடத்தி, பணம் கேட்டு மிரட்டிய கேரளாவை சேர்ந்த நால்வரை, போலீசார் கைது செய்தனர்.
பா. ஜ., முன்னாள் எம்.எல்.சி., தயானந்த ரெட்டி, கடந்த மூன்று நாட்களுக்கு முன், பெங்களூரு ரூரல் மாவட்டம், ஆனேக்கல்லில் உள்ள 'கோல்டு காயின்' கிளப்புக்கு வந்திருந்தார்.
நள்ளிரவு 12:15 மணிக்கு காரில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த இவரை, பைக்கில் வந்த மர்ம கும்பல் வழிமறித்து துப்பாக்கியை காட்டி கடத்தி சென்றது.
அத்திப்பள்ளியின், கே.ஹெச்.பி., லே - அவுட் அருகில் அழைத்து சென்றனர். ' உன்னை கொலை செய்ய, எங்களுக்கு 10 கோடி ரூபாய் கொடுத்துள்ளனர்' என கூறி, தயானந்த ரெட்டியின் கழுத்தில் துப்பாக்கி வைத்து மிரட்டினர். பீதியடைந்த அவர், 'நான் பணம் கொடுக்கிறேன். என்னை கொல்லாதீர்கள்' என, மன்றாடினார்.
அந்நபர்களும் மூன்று கோடி ரூபாய்க்கு பேரம் பேசினர். இறுதியாக இரண்டு கோடி ரூபாய்க்கு சம்மதித்தனர். தயானந்த ரெட்டியும், தற்போது அவ்வளவு பணம் இல்லை. காலையில் வங்கி திறந்தவுடன், எடுத்து தருவதாக கூறி னார்.
அவர்களும் பணம் 'டிரா' செய்து கொண்டு, போன் செய்யும்படி கூறி, அவரை அனுப்பினர். அவர் அங்கிருந்து நேராக அத்திப்பள்ளி போலீஸ் நிலையத்துக்கு சென்று, நடந்ததை கூறி புகார் அளித்தார்.
போலீசாரும் பல கோணங்களில் விசாரணை நடத்தி, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, கேரளாவை சேர்ந்த பிரவீன், 29, ரோமியோ மார்ட்டின், 30, ஆஷீக், 28, ஆதர்ஷ், 28, ஆகிய நால்வரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
