தம்பியின் இறுதிச்சடங்கிற்கு வந்த சகோதரி கார் மோதி பலி
தம்பியின் இறுதிச்சடங்கிற்கு வந்த சகோதரி கார் மோதி பலி
ADDED : ஜூன் 29, 2025 07:03 AM

தட்சிண கன்னடா : தம்பியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க வந்த அக்கா, இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, கார் மோதியதில் உயிரிழந்தார்.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின் பங்கரகுலுாரை சேர்ந்தவர் கோபால் ஆச்சார்யா, 57. இவரின் மூத்த மகள் ஸ்ருதி, 27. சென்னையில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.
இவரின் தம்பி சுஜித், மெக்கானிக்காக பணியாற்றி வந்தார். ஜூன் 10ம் தேதி உடல் நல பாதிப்பால் சுஜித் உயிரிழந்தார். இவரின் இறுதிச்சடங்கில் பங்கேற்க, ஸ்ருதி வந்திருந்தார்.
நேற்று முன்தினம் தன் தந்தையுடன், ஸ்ருதி, வங்கிக்கு சென்றார். அங்கு பணியை முடித்துக் கொண்டு வீட்டுக்கு இருவரும் இருசக்கர வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.
பவஞ்சே அருகே வந்தபோது, மழை பெய்ய துவங்கியது. சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்தி, தந்தையும், மகளும் 'மழை கோட்' அணிந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்திசையில் வேகமாக வந்த கார் ஒன்று, பைக்குடன் ஸ்ருதியை மோதி இழுத்துச் சென்றது. இதில், ஸ்ருதி, அவரது தந்தை கோபால் ஆச்சார்யா, சாலை ஓரத்தில் நின்றிருந்த கைருன்னிசா, 52, ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.
அங்கிருந்தவர்கள், மூவரையும் மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி, ஸ்ருதி உயிரிழந்தார்.
மகன் இறந்து, 15 நாட்களுக்குள், மகளும் இறந்தது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.
