ADDED : ஆக 04, 2026 02:09 AM
- நமது நிருபர் -
கர்நாடகாவில் காங்கிரசின் கோட்டையாக கருதப்படும் மாவட்டங்களில் ஒன்று கோலார். இங்குள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில் தங்கவயல், மாலுார், கோலார், பங்கார்பேட்டை ஆகிய நான்கு தொகுதிகள் காங்கிரஸ் வசம் உள்ளன.
ஆனால், இம்மாவட்டத்திற்கு, முந்தைய சித்தராமையா தலைமையிலான அரசில் அமைச்சர் பதவி, யாருக்கும் வழங்கப்படவில்லை.
பங்கார்பேட்டை: பங்கார்பேட்டை தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை எம்.எல்.ஏ.,வாக வென்ற எஸ்.என்.நாராயணசாமி, அமைச்சர் பதவி கேட்டு டில்லி வரை முட்டி மோதினார்.
ஆனால் அமைச்சர் பதவி கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்து உள்ளார். இதனால், பங்கார்பேட்டை காங்கிரஸ் வட்டாரத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
தங்கவயல்: தங்கவயல் தொகுதியில் தொடர்ந்து இரு முறை எம்.எல்.ஏ.,வாக உள்ளவர் காங்கிரசின் ரூபகலா. இவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க சாதகமான சூழ்நிலை இருந்தும், அவரது தந்தை முனியப்பா, மாநில உணவுத் துறை அமைச்சராக இருந்து வருகிறார். ஒரே குடும்பத்தில் இருவருக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்பு இல்லையென கட்சி மேலிடம் கைவிரித்தது.
75 வயதைக் கடந்த தன் தந்தையான முனியப்பாவை ஓய்வெடுத்துக் கொள்ளுமாறு கெஞ்சியும், அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இதனால், குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்பட்டு உள்ளது.
மாலுார்: மாலுார் தொகுதியில் இரு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் நஞ்சேகவுடா. கோலார் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவராக இருந்து வருகிறார்.
இது கேபினட் அமைச்சர் பதவிக்கு சமமான அந்தஸ்து கொண்டது. அமைச்சர் பதவிக்கு பெரும் முயற்சியில் ஈடுபட்டார். ஒக்கலிகர் இட ஒதுக்கீட்டை கையில் பிடித்தார்.
அதே சமூகத்தைச் சேர்ந்த முதல்வர் சிவகுமார் ஆதரவுடன், அமைச்சர் ஆகலாம் என்று கருதினார். ஆனாலும் பயனில்லை.
கோலார்: கோலார் தொகுதியில் காங்கிரசில் வென்ற கொத்துார் மஞ்சுநாத், ஏற்கனவே முல்பாகல் தொகுதியில் இருந்து ஒரு முறை எம்.எல்.ஏ., ஆக இருந்தவர். ஜாதி சான்றிதழ் விவகாரத்தில் சிக்கிய, உச்ச நீதிமன்றத்தில் குட்டு வாங்கியவர். இவரும் அமைச்சர் பதவி கேட்டு பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார். ஆனால் ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதற்கு முன் பைரேகவுடா, சீனிவாச கவுடா, நிசார் அஹமது ஆகியோர் அமைச்சர் பதவியில் இருந்துள்ளனர்.
அமைச்சரவை விரிவாக்கத்தில் கோலார் மாவட்டத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கிடைக்கவில்லை.
இம்மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவி, பிற மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு அமைச்சர் வசம் ஒப்படைக்கப்படும்.
சிக்கபல்லாப்பூர் மாவட்டம் கோலார் மாவட்டத்தில் இருந்து தனியாக பிரிக்கப்பட்ட சிக்கபல்லாப்பூர் மாவட்டத்தில், ஐந்து சட்டசபைத் தொகுதிகள் உள்ளன.
இதில் சிக்கபல்லாப்பூர், பாகேபள்ளி, சிந்தாமணி ஆகிய மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். சித்தராமையா தலைமையிலான அரசில் சிந்தாமணி தொகுதி எம்.எல்.ஏ., - எம்.சி.சுதாகர் அமைச்சராக இருந்தார்.
அவர் சமீபத்தில் இறந்து விட்டார். இந்த மாவட்டத்துக்கும் தற்போது அமைச்சர் பதவி கிடைக்காததால், அம்மாவட்ட மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
