/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜூலை 23, 24ல் சிறு வியாபாரிகள் மாநிலம் தழுவிய... கடையடைப்பு!: வணிகவரி துறையினர் கெடுபிடியை கண்டித்து போராட்டம்
/
ஜூலை 23, 24ல் சிறு வியாபாரிகள் மாநிலம் தழுவிய... கடையடைப்பு!: வணிகவரி துறையினர் கெடுபிடியை கண்டித்து போராட்டம்
ஜூலை 23, 24ல் சிறு வியாபாரிகள் மாநிலம் தழுவிய... கடையடைப்பு!: வணிகவரி துறையினர் கெடுபிடியை கண்டித்து போராட்டம்
ஜூலை 23, 24ல் சிறு வியாபாரிகள் மாநிலம் தழுவிய... கடையடைப்பு!: வணிகவரி துறையினர் கெடுபிடியை கண்டித்து போராட்டம்
ADDED : ஜூலை 16, 2025 11:06 PM

பெங்களூரு: ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய்க்கு மேல் வணிகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு வணிக வரித்துறை லட்சக்கணக்கில் வரி விதித்துள்ளது. 'இதை கண்டித்து மாநிலம்முழுதும் பால், மளிகை கடை, பேக்கரி போன்ற சிறிய கடைகள் வரும் 23, 24ம்தேதிகளில் மூடப்படும்' என, வியாபாரிகள் தரப்பு அறிவித்துள்ளது.
பெங்களூரில் உள்ள பேக்கரி, மளிகை கடை போன்ற சிறு வியாபாரிகளின் கடைகளில், வணிக வரித்துறை அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, கடைகளில் வைக்கப்பட்டிருந்த, 'கியூ.ஆர்., கோடு ஸ்கேனர்கள்' உடன் இணைப்பில் உள்ள வங்கி கணக்கை ஆய்வு செய்தனர். 2021 - 22 முதல் 2024 - 25ம் நிதியாண்டு வரை நடந்த பரிவர்த்தனைகளை கணக்கிட்டனர்.
வரி விதிப்பு
ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய்க்கு மேல் வியாபாரம் செய்தவர்களுக்கும், 20 லட்சம் ரூபாய்க்கு மேல் சேவை வழங்கியவர்களுக்கும், லட்சக்கணக்கிலான ரூபாய் வரியாக விதிக்கப்பட்டது.
பெரும்பாலானவர்களுக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வரி விதிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி., பதிவு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டது. இதுபோல, 14 ஆயிரம் வியாபாரிகளுக்கு வரி கட்டும் படி நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.
அதிர்ச்சி
இதை கேட்ட வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். வணிக வரித்துறை அலுவலகத்துக்கு நேரில் சென்று அதிகாரிகளிடம் முறையிட்டனர்.
ஆனால், அதிகாரிகள் வரியை கட்டி தான் ஆக வேண்டும் என உறுதியாக கூறி விட்டனர்.
இதனால், செய்வதறியாது திகைத்த சில வியாபாரிகள், தங்கள் கடைகளில் உள்ள கியூ.ஆர்., கோடு ஸ்கேனர்களை முற்றிலுமாக அகற்றி விட்டனர்.
இதன் மூலம் வணிக வரித்துறை அதிகாரிகளின் சோதனையில் இருந்து தப்ப முடியும் என நம்புகின்றனர். அதே சமயம், ஸ்கேனர் இல்லாததால் வியாபாரம் பாதிக்கப்படுவதாகவும் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
ஆலோசனை
இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, கர்நாடக மாநில தொழிலாளர் கவுன்சில் சார்பில் பெங்களூரில் நேற்று ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில், நகரில் உள்ள ஏராளமான சிறு, குறு வியாபாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்பட்டன.
இது குறித்து, கவுன்சில் தலைவர் ரவி ஷெட்டி பைந்துார் கூறியதாவது:
ஆண்டுக்கு, 40 லட்சம் ரூபாய் வணிகம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு திடீரென வணிக வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அளித்து உள்ளனர்.
பல ஆண்டுகளாக சிறிய அளவிலான கடைகளை நடத்தி வருகிறோம். கடையின் மதிப்பே 2 முதல் 10 லட்சம் ரூபாய் வரை தான் இருக்கும். அப்படி இருக்கையில், பல லட்சங்களில் வரியை செலுத்த சொல்வது நியாயம் இல்லை.
போராட்டம்
இது, சிறு வணிகர்களுக்கு எதிரான நடவடிக்கையாகும். மத்திய அரசு சிறு, குறு வணிகர்களுக்கு தீங்கு விளைவிக்கும் கொள்கையை தீர்க்கமாக பின்பற்றுகிறது.
இப்பிரச்னையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலையிட வேண்டும். எங்களுக்கு நியாயமான தீர்ப்பை அளிக்க வேண்டும்.
அதுவரை நாங்கள் போராட்டம் நடத்துவோம். அநியாய வரி விதிப்பை கண்டித்து வரும் 23, 24ம் தேதிகளில் மாநிலம் முழுதும் உள்ள பால், மளிகை கடை, பேக்கரி, சிகரெட், குட்கா விற்பனை செய்யும் சிறு கடைகள் முற்றிலும் மூடப்படும். 25ம் தேதி பெங்களூரு சுதந்திர பூங்காவில் மாபெரும் போராட்டம் நடக்கும். இதில், ஆயிரக்கணக்கிளான வியாபாரிகள் கலந்து கொள்வர்.
இவ்வாறு அவர் கூறினார்.