/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கனிம சுரங்கத்தில் இருந்து கடத்தல்; : 2,487 டன் இரும்பு தாது பறிமுதல்
/
கனிம சுரங்கத்தில் இருந்து கடத்தல்; : 2,487 டன் இரும்பு தாது பறிமுதல்
கனிம சுரங்கத்தில் இருந்து கடத்தல்; : 2,487 டன் இரும்பு தாது பறிமுதல்
கனிம சுரங்கத்தில் இருந்து கடத்தல்; : 2,487 டன் இரும்பு தாது பறிமுதல்
ADDED : பிப் 12, 2026 05:52 AM

பல்லாரி: பல்லாரியில் மத்திய அரசின் தேசிய கனிம மேம்பாட்டு கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, கனிம சுரங்கத்தில் இருந்து கடத்தப்பட்ட 2,487 டன் இரும்பு தாதுக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. நான்கு பேர் கைதாகி உள்ளனர்.
கர்நாடகா - ஆந்திரா மாநில எல்லையில் உள்ளது பல்லாரி. கனிம சுரங்க தொழிலுக்கு பெயர் போன இம்மாவட்டத்தில், சட்டவிரோதமாக கனிம சுரங்களுக்கும் இயங்கி வருகின்றன.
இதனை தடுக்கும் வகையி ல், அமைச்சகத்தின் துணை நிறுவனமான, தேசிய கனிம மேம்பாட்டு கழகம் பல்லாரியில் நிறுவப்பட்டது.
கனிம மேம்பாட்டு கழக அதிகாரிகள் ஒப்புதலுக்கு பின்னரே, லாரிகளில் இரும்பு தாதுக்கள் எடுத்து செல்லப்படுகின்றன. சுரங்கத்திற்குள் வரும் லாரிகளில் ஜி.பி.எஸ்., கருவிகளும் பொருத்தப்பட்டு உள்ளன.
எஸ்.பி.,க்கு தகவல் இந்நிலையில் கனிம மேம்பாட்டு கழகத்தின் கட்டுப்பாட்டில் சண்டூரில் உள்ள சுரங்கத்தில் இருந்து, இரும்பு தாதுக்கள் சட்டவிரோதமாக லாரிகளில் கொண்டு செல்லப்படுவதாக, பல்லாரி எஸ்.பி., சுமன் பன்னேகருக்கு தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்படி கடந்த மாதம் 17ம் தேதி, சண்டூர் பாப்பையா கிராஸ் சுங்கச்சாவடி பகுதியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்ட போது, ஆவணங்கள் இன்றி எடுத்து செல்லப்பட்ட, 20 டன் இரும்பு தாதுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லாரி டிரைவர் சித்ரதுர்காவின் நாகலாபுரா கிராமத்தின் திப்பேசாமி கைது செய்யப்பட்டார்.
அவரிடம் நடத்திய விசாரணையில், கனிம மேம்பாட்டு கழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள, சண்டூர் சுரங்கத்தின் 'சி' பிளாக் பகுதியில் இருந்து, இரும்பு தாதுக்கள் சட்டவிரோதமாக கொண்டு சென்றது தெரிந்தது.
அதிகாரிகள் தொடர்பு? இவர் கொடுத்த தகவலின்படி, ஆந்திராவின் நிர்மல்கல்லு என்ற இடத்தில் இயங்கி வரும் ஸ்ரீசாய் பாலாஜி ஸ்பாஞ்ச் இரும்பு தொழிற்சாலையில் இருந்து 1,050 டன்; பல்லாரி ரூரல் சிர்வாராவில் உள்ள நோபல் ஸ்பாட் மற்றும் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து 1,437 டன் இரும்பு தாதுக்கள், பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கில் சில முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்து உள்ளது. கனிம மேம்பாட்டு கழக அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதா என்றும் விசாரணை நடக்கிறது. தோரணகல்லு டி.எஸ்.பி., பிரசாத், சண்டூர் இன்ஸ்பெக்டர் மகேஷ் கவுடா தலைமையில் விசாரணை நடப்பதாகவும், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பல்லாரி எஸ்.பி., சுமன் பன்னேகர் நேற்று தெரிவித்தார்.

