ADDED : ஆக 02, 2026 11:11 PM
பல்லாரி: சாலை அமைக்க, 1,748 மரங்களை வெட்டுவதற்கு ச மூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
பல்லாரி மாவட்டம் சந்துார் தாலுகா சுவாமிமலை பகுதியில் தனியார் நிறுவனங்கள், கனிம சுரங்கங்களை நடத்தி வருகின்றன. கே.எப்.ஐ.எல்., என்ற நிறுவனம் கனிமங்களை கொண்டு செல்லும் லாரிகளுக்கு, புதிய சாலை அமைக்க வேண்டும் என மாநில அரசிடம் முறையிட்டது.
புதிய சாலை அமைக்க, 1,748 மரங்களை வெட்ட வேண்டும் என கூறப்பட்டது. இதற்கு மாநில அரசு ஒப்புதல் வழங்கியது.
இத்திட்டம் தவிர்க்க முடியாத ஒன்று என்பதால், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சகம் சாலை அமைக்க ஒப்புதல் வழங்க வேண்டும் என மாநில அரசு பரிந்துரைத்தது.
இந்நிலையில், சாலை அமைப்பதற்கு 1,748 மரங்களை வெட்டுவதற்கு மத்திய அமைச்சகம் ஒப்புதல் அளித்து உள்ளது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
மலைப்பகுதியில் உள்ள மரங்கள் மிக முக்கியமானவை. இவை சுற்றுச்சூழல் சமநிலையை பேணக்கூடியவை. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்களை வெட்டினால் வெப்ப நிலை அதிகரிக்கும். மழை பொழிவு குறையும். விவசாயம் பாதிக்கப்படும். வனவிலங்குகள், பறவைகள் பாதிக்கப்படும்.
அதே நேரத்தில் வளர்ச்சி பணிகள் அவசியமானவை தான். அதற்காக சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் அளவுக்கு வளர்ச்சி பணிகள் நடக்கக்கூடாது. சாலையை வேறு பகுதியில் அமைப்பது குறித்து தனியார் நிறுவனம் ஆலோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
