திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம் தாயை கல்லால் அடித்து கொன்ற மகன்
திருமணம் செய்து வைக்காததால் ஆத்திரம் தாயை கல்லால் அடித்து கொன்ற மகன்
ADDED : ஏப் 03, 2026 03:55 AM

ஹாசன்: திருமணம் செய்து வைக்காததால், தாய் மீது கல்லால் அடித்த சம்பவத்தில், சிகிச்சை பலனின்றி தாய் மரணமடைந்தார்.
ஹாசன் மாவட்டம் சென்னராயபட்டணா தாலுகாவின் கங்கராஜு - கங்கம்மா தம்பதி. இவர்களுக்கு இரு மகன்கள், ஒரு மகள். மூத்த மகன் கலப்பு திருமணம் செய்து கொண்டதால், வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.
மகளை பெங்களூரை சேர்ந்த ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இரண்டாவது மகன் உமா சங்கர், 40,க்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வருகின்றனர்.
கடந்தாண்டு உமாசங்கர், கும்பமேளாவுக்கு சென்று விட்டு, காரில் ஊருக்கு திரும்பும் போது நடந்த விபத்தில், அவரின் தலை, வயிற்று பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.
10 மாதங்களாக அதற்கான சிகிச்சை பெற்று வருவதுடன், மருந்து, மாத்திரைகளையும் சாப்பிட்டு வந்தார். கடந்த ஒரு மாதமாக மாத்திரைகளை உட்கொள்வதை நிறுத்தி உள்ளார். இதனால், கடந்த சில நாட்களாக தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி பெற்றோரையும், உறவினர்களையும் நச்சரித்து வந்துள்ளார்.
விபத்தால் ஏற்பட்ட உடல் நல பாதிப்பால், அவருக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. இதனால், மகனுக்கும், தாய்க்கும் இடையே அடிக்கடை சண்டை நடந்து வந்துள்ளது. மார்ச், 28 ம் தேதி இது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. அப்போது, தாய் கங்கம்மாவை தள்ளியதில் அவர் கீழே விழுந்தார். உடன் அவர் மீது அருகில் இருந்த கல்லை எடுத்து வீசினார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், உமா சங்கரை பிடித்து, ஷ்ரவணபெளகோலா போலீசில் ஒப்படைத்தனர்.
படுகாயம் அடைந்த கங்கம்மாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த கங்கம்மா, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். கொலை முயற்சி வழக்கில் உமா சங்கரை கைது செய்த ஷ்ரவணபெளகோலா போலீசார், இப்போது கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
