தீவிரம் அடைகிறது தென்மேற்கு பருவமழை ஜூன் 14 வரை கனமழை எச்சரிக்கை
தீவிரம் அடைகிறது தென்மேற்கு பருவமழை ஜூன் 14 வரை கனமழை எச்சரிக்கை
ADDED : ஜூன் 07, 2026 11:38 PM
பெங்களூரு: 'ஜூன் 8, 9ம் தேதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால், மாநிலம் முழுதும், 'ரெட் அலெர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது. வரும் 14ம் தேதி வரை மாநிலம் முழுதும் மழை பெய்யும்' என வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிக்கை:
தென் கொங்கன் கடற்கரைக்கு அப்பால் அரபிக்கடலில் 5.8 கி.மீ. உயரத்தில் ஒரு சூறாவளி சுழற்சி உருவாகியுள்ளது. இதனுடன், கடலோர கர்நாடகா முதல் கடலோர ஆந்திரப் பிரதேசம் வரை ஒரு வலுவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி காணப்படுகிறது, இது மழைப்பொழிவின் தீவிரத்தை அதிகரிக்கும்.
சிவப்பு எச்சரிக்கை எனவே, இன்று கர்நாடகா தெற்கு, வடக்கு உள் மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கையும்; கடலோர மாவட்டங்களுக்கு 'சிவப்பு' எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது.
இன்றும், நாளையும், மாநிலம் முழுதும் கனமழை பெய்ய உள்ளதால் 'சிவப்பு' எச்சரிக்கையும்; 10, 11 வரை மாநிலம் முழுதும் ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு உள்ளது. ஜூன் 10ம் தேதி வரை 60 கி.மீ., வேகத்திற்கு சூறாவளி வீசும். எனவே, இந்த காலகட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம்.
இதுபோன்று ஜூன் 12, 13, 14ம் தேதிகளில் மாநிலம் முழுதும் கனமழை பெய்யும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
கர்நாடக மாநில இயற்கை பேரிடர் கண்காணிப்பு மையத்தின் தரவுகளின்படி, மார்ச் முதல் மே வரையிலான பருவமழைக்கு முந்தைய காலகட்டத்தில், கர்நாடகாவில் இயல்பான மழை பதிவாகி உள்ளது.
இந்த காலத்தில், 12.5 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. நீண்டகாலமாக பதிவாகியிருந்த சராசரியான 11.5 செ.மீ., அளவை விட 8 சதவீதம் அதிகம்.
42 சதவீதம் அதிகம் இதேநேரத்தில் தெற்கு உள் பகுதியில் சராசரியாக பெய்து வந்த 13.8 செ.மீ.,க்கு பதிலாக, 12.8 செ.மீ., மழை மட்டுமே பெய்துள்ளது. வடக்கு உள் பகுதியில் 7.2 செ.மீ., மழைக்கு பதிவாக, 11.2 செ.மீ., மழை பெய்துள்ளது. இது 42 சதவீதம் அதிகமாகும்' என குறிப்பிட்டு உள்ளது.
பல்லாரியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையில், அரசு விம்ஸ் மருத்துவமனைக்குள், ஜன்னல்கள், வராண்டா வழியாக மழைநீர் புகுந்தது. இதனால் நோயாளிகளும், அவர்களின் உறவினர்களும் சிரமத்துக்கு உள்ளாகினர். மழைநீர் புகுந்ததும், நீரை வெளியேற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் பெரிய அளவில் பிரச்னை ஏற்படவில்லை.
நோயாளிகளின் உறவினர்கள் கூறுகையில், 'இரவு முழுதும் தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், நோயாளிகள் போதுமான அளவு துாங்க முடியவில்லை. சிலர் படுக்கைகள், உடைமைகளுடன் பாதுகாப்பான இடங்களுக்கு மாற வேண்டியிருந்தது. மழை காலத்தில் இத்தகைய பிரச்னைகள் மீண்டும் வராத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
நேற்று மாலை கெங்கேரி, ஆர்.ஆர்., நகர், பனசங்கரி, எம்.ஜி., சாலை, இந்திரா நகர், பசவனகுடி, சிவாஜி நகர், ஜே.சி., நகர், ஆர்.டி., நகர் உட்பட பல பகுதிகளில் நேற்று கனமழை பெய்தது.
உத்தர கன்னடா மாவட்டத்தின் சிர்சியில், நேற்று காலை முதலே கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கி உள்ளது.
போக்குவரத்து போலீஸ் எச்சரிக்கை
பெங்களூரில் நாளை வரை கனமழை பெய்யும் என கர்நாடக மாநில தேசிய பேரிடர் கண்காணிப்பு மையம் எச்சரித்து உள்ளது. எனவே, பொது மக்களின் நலனை கருத்தில் கொண்டு, மழை நேரத்தில் தேங்கிய நீரில் செல்லும் போது எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும். தேவையின்றி மழை நேரத்தில் வாகனத்தில் செல்வதை தவிர்க்கவும்.
பெங்களூரு போக்குவரத்து போலீசில் 'பி.டி.பி., எஸ்.டி.ராம்' செயலியை பயன்படுத்தி, போக்குவரத்து நெரிசலையும், முக்கிய தகவல்களையும் அவ்வப்போது தெரிந்து கொள்ளுங்கள் என, போலீசார் அறிவித்துள்ளனர்.
