ADDED : ஆக 04, 2026 02:08 AM

- நமது நிருபர் -:
ராய்ச்சூர் மாவட்டம், சிந்தனுாரில் அமைந்துள்ளது ஸ்ரீ அம்பாதேவி கோவில். இத்தலம், அதானி அருகில் உள்ள ஹிரேஹரிவனத்தில் 1876ல் பிறந்த ஸ்ரீசிதானந்தர் என்ற துறவியுடன் தொடர்பு உள்ளது.
இவர், சிறு வயதிலேயே தேவியின் தெய்வீக தரிசனங்களை பெற்றதாக பக்தர்கள் கருதினர். சிதானந்தர், வறுமையில் வளர்ந்தாலும், ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்டார். துங்கபத்ரா அருகில் அறிஞர் ஹோனப்பாவிடம் ஆரம்ப கல்வி பெற்றார். ரவுடகுண்டா அருகில் உள்ள ரங்கநாதர் கோவில் முதல் சோமலாபுரத்தின் அடர்ந்த வனப்பகுதி வரையிலும் உள்ள பல்வேறு குகைகளில் தியானத்தில் ஈடுபட்டார்.
பல ஆண்டுகால தவத்தால் மகிழ்ந்த தேவி, துறவிக்கு காட்சி அளித்தார். 'என்ன வரம் வேண்டும்' என்று கேட்டார். 'தனக்கு எதுவும் வேண்டாம். இந்த புனித இடம், ஒவ்வொரு பக்தரின் விருப்பத்தை நிறைவேற்றும் கோவிலாக மாற வேண்டும்' என்று துறவி கூறினார்.
அவரது பக்தியால் நெகிழ்ந்த தேவி, 'பகளாமுகி'யாக காட்சி அளித்தார். பகளாமுகி என்பது, 'தன் பக்தர்களை தாக்கும் தீய சக்திகள், எதிரிகளின் வாக்கு, புத்தியை கட்டுப்படுத்தி ஸ்தம்பிக்கச் செய்பவள்' என்று அர்த்தம்.
அன்று முதல் படிப்படியாக இக்கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்த வண்ணம் இருந்தது. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
ஜனவரியில் கோலாகல திருவிழா நடக்கிறது. இது தவிர, தசரா, நவராத்திரி, அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் அம்மனை தரிசிக்க, வரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
