ADDED : ஆக 04, 2026 02:08 AM
- நமது நிருபர் -
ஆதி சக்தி பார்வதி தேவி கோவில் இல்லாத ஊர்கள் இருக்க முடியாது. ஒவ்வொரு கோவிலும் தனிச்சிறப்பு மிக்கவை. துமகூரில் உள்ள ஆதி சக்தி கோவிலும், மிகவும் மகத்துவமானது. வாழ்க்கையை வளமாக்கும் அற்புத சக்தி கொண்டது.
துமகூரு மாவட்டம், குப்பி தாலுகாவின், கூளுரு பேரூராட்சியின், ஹெத்தேனஹள்ளியில் ஆதி சக்தி கோவில் அமைந்துள்ளது. இங்கு குடிகொண்டுள்ள ஆதி சக்தி அம்மன் மிகவும் சக்தி வாய்ந்தவர். சுற்றுப்புற கிராமத்தினரின் காவல் தெய்வமாக விளங்குகிறார். வெளி மாவட்டங்களில் இருந்தும், பக்தர்கள் வருகின்றனர்.
இந்த கோவில் புராதனமானது. இயற்கை எழில் மிகுந்த அமைதியான சூழ்நிலையில் இருப்பதால், மனதுக்கு இதம் அளிக்கிறது. ஆதி சக்தியை வணங்கினால், வாழ்க்கை வளமாகும். கஷ்டங்கள் அகலும் என்பது ஐதீகம். பெண்கள் தங்களின் குடும்ப நன்மைக்காக, மாவிளக்கு எடுத்து வேண்டுதல் வைப்பர். திருமண தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்கு வந்து, அம்பாளை தரிசித்து வேண்டினால், திருமணம் கைகூடும். குழந்தை பிறக்கும்.
செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். ராகு காலத்தில் எலுமிச்சைப்பழ விளக்கு ஏற்றுவர். ஆடி மாதம் கூழ் வார்ப்பது வழக்கம். நவராத்திரி, தீபாவளி போன்ற பண்டிகை நாட்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் நடக்கும். இதில் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர். மாண்டியாவுக்கு வரும் பலரும், ஆதி சக்தியை தரிசிக்காமல் செல்வது இல்லை.
* எப்படி செல்வது?
பெங்களூரில் இருந்து 102 கி.மீ., மைசூரில் இருந்து 44 கி.மீ., தொலைவில் மாண்டியா உள்ளது. அனைத்து நகரங்களில் இருந்தும், மாண்டியாவுக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. விமானத்தில் வருவோர் பெங்களூரு அல்லது மைசூரு வழியாக வரலாம். மாண்டியாவில் இருந்து, ஆதி சக்தி கோவிலுக்கு, வாடகை வாகனங்கள் இயங்குகின்றன. ஆடி மாதம் அம்பாளுக்குரியது. இந்த மாதத்தில் ஆதி சக்தியை தரிசிப்பது, புண்ணியத்தை அளிக்கும்.
* தரிசன நேரம்: காலை 10:00 மணி முதல், மாலை 4:00 மணி வரை.
***
