கான்ஸ்டபிள் தேர்வில் குளறுபடி: பிரியங்க் ராஜினாமா செய்ய அசோக் கோரிக்கை
கான்ஸ்டபிள் தேர்வில் குளறுபடி: பிரியங்க் ராஜினாமா செய்ய அசோக் கோரிக்கை
ADDED : ஆக 04, 2026 02:09 AM

பெங்களூரு: ''போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் நடந்த குளறுபடிக்கு உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்,'' என எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறி உள்ளார்.
கர்நாடகாவில் நேற்று முன்தினம் 3,991 போலீஸ் கான்ஸ்டபிள் பதவிகளுக்கான தேர்வு நடந்தது. மாநிலம் முழுதும் பல மாவட்டங்களை சேர்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர்.
விஜயபுரா மாவட்டம், சாரதாம்பா தேர்வு மையத்தில் வினாத்தாள் 30 நிமிடங்கள் தாமதமாக வழங்கப்பட்டதாக கூறி தேர்வு எழுதியவர்கள் போராட்டம் நடத்தினர். இவர்களை தடுக்கும் பணியில் மாவட்ட போலீசார் ஈடுபட்டனர். இதனால், தேர்வர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்தது.
வினாத்தாள் எண்ணும், விடைத்தாள் எண்ணும் வெவ்வேறாக வழங்கப்பட்டது குழப்பத்தை ஏற்படுத்தியதாக தேர்வர்கள் குற்றஞ்சாட்டினர். 'வினாத்தாள் எண்ணும், விடைத்தாள் எண்ணும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
வினாத்தாள் சரியான நேரத்திலேயே வினியோகிக்கப்பட்டது' என, விஜயபுரா துணை கமிஷனர் ஆனந்த் மறுப்பு தெரிவித்தார்.
இச்சம்பவம் குறித்து, எதிர்க்கட்சி தலைவர் அசோக் கூறியதாவது:
மாநிலத்தில் மற்றொரு போட்டித்தேர்வை நடத்துவதில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்து உள்ளது.
ஆயிரக்கணக்கானோர் போலீஸ் தேர்வுக்காக பல ஆண்டுகளாக தயாராகினர். அவர்களின் உழைப்பு, கனவில் காங்கிரஸ் அரசு மண் அள்ளிப் போட்டு உள்ளது.
இந்த விவகாரத்திற்கு உள்துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தார்மீக பொறுப்பேற்று உடனடியாக பதவி விலக வேண்டும். பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மறு தேர்வு நடத்தப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
