ADDED : ஆக 19, 2026 03:20 AM
சிருங்கேரி: ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சந்நிதானத்தின் 34வது பிறந்தநாள் சிருங்கேரியில் நேற்று கொண்டாடப்பட்டது.
ஸ்ரீ மடத்தின் முதன்மை செயல் அதிகாரி பி.ஏ.முரளி, மடத்தின் சேவைகளை குறிப்பிட்டு உரையாற்றினார். அதன்பின் அருளுரை வழங்கிய சுவாமிகள் கூறியதாவது:
சனாதன தர்ம வைதிக மார்க்கத்தினை காப்பாற்றுவதற்காக அவதரித்தவர் ஆதி சங்கரர். அவரை எப்போதும் நினைவில் கொள்வதும், அவருடைய போதனைகளை கடைப்பிடிப்பதும் ஒவ்வொருவரின் கடமை. அதன் மூலம் நம் பிறவி அர்த்தமுள்ளதாகிறது. குரு மற்றும் இறைவனின் கிருபைக்கு பாத்திரமாகிறோம்.
நன்றாக வேதாந்தத்தினை படித்திருந்தாலும், வைராக்கியம் கைகூடுவதும், அதனை வாழ்க்கையில் செயல்படுத்துவதும் சிலரால் மட்டுமே முடிகிறது என்பதன் காரணம் மாயையே ஆகும். அதனின்று வெளிவருவதற்கு இறைவன் மற்றும் குருவின் அனுக்ரஹம் தேவை. இதைத்தான் பஜகோவிந்தத்தில் ஆதி சங்கரர் கூறுகிறார்.
ஆதிசங்கரரின் உயர்ந்த கொள்கையான பிரம்ம சத்யம், உலகம், மாயை என்பதனை சரியாக புரிந்து கொள்வது அவசியம். உலகத்தில் காணப்படும் அனைத்தும் மாற்றத்துக்கு உட்படுவதால், அதன் தோற்றங்கள் மாயை. மாறாத நிரந்தரமான பிரம்மம் மட்டுமே உண்மை என்பதே இதன் சரியான விளக்கம்.
நம் நாட்டில் இருப்பது உயர்ந்த சனாதன தர்மம். இந்த தர்மம் ஏதோ ஒருவரால் செய்யப்பட்டது அல்ல. அது அனாதி யாகும். நாம் கடைப்பிடிக்கும் தர்ம பரம்பரை, உலகம் தோன்றிய முதல் இருக்கும் ஒரு உன்னத மார்க்கமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
