ADDED : செப் 12, 2026 11:16 PM

- நமது நிருபர் -
மங்களூரில் வசிக்கும் மோகன் ராவ் என்பவரின் வீட்டில், பாரம்பரியமாக விநாயகர் சிலை தயாரிக்கின்றனர். இவர்கள் தயாரிக்கும் விநாயகர் சிலைக்கு, அமெரிக்காவிலும் 'டிமாண்ட்' உள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரின், மன்னுகுட்டா அருகில் வசிக்கும் மோகன் ராவ் குடும்பத்தினர், கடந்த, 97 ஆண்டுகளாக விநாயகர் சிலை தயாரிக்கின்றனர். ஆரம்பத்தில் ஒன்றிரண்டு சிலைகள் மட்டும் தயாரித்தனர்.
அதன் பின், நிறைய பேர் கேட்கவே, நுாற்றுக்கணக்கான சிலைகள் தயாரிக்க ஆரம்பித்தனர். வம்சாவளியாக இந்த தொழிலை செய்கின்றனர். ஒரே வீட்டில் சிறிது, பெரிதாக 200க்கும் மேற்பட்ட சிலைகள் தயாரிக்கின்றனர். இவர்கள் ரசாயன நிறங்கள் பயன்படுத்துவதில்லை.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத, களி மண் மற்றும் வைக்கோல் பயன்படுத்தி, விநாயகர் சிலைகளை தயாரிக்கின்றனர். விநாயகர் சதுர்த்தி நேரத்தில், முன் பதிவு செய்வோருக்கு மட்டும், சிலைகள் தயாரித்து கொடுக்கின்றனர்.
வீடுகளில் வைக்கப்படும் சிலைகள், பொது இடங்களில் வைக்கும் சிலைகளும் கிடைக்கும். இவர்கள் தயாரிக்கும் சிலைகளுக்கு, தட்சிண கன்னடா, உடுப்பி, காசரகோடு உட்பட, பல்வேறு பகுதிகளில் நல்ல மவுசு உள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் ஒரு குடும்பம், கடந்த 27 ஆண்டுகளாக மோகன் ராவ் குடும்பத்தினரிடம், விநாயகர் சிலை வாங்கி விமானத்தில் அமெரிக்காவுக்கு கொண்டு செல்கின்றனர். இவரது குடும்பத்தில் சிறப்பு சம்பிரதாயம் உள்ளது. குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து, விநாயகர் சிலை தயாரிக்கின்றனர். விநாயகரின் ஜென்ம நட்சத்திரமாக கருதப்படும் சித்ரா நட்சத்திர நாளன்று, சிலை தயாரிக்கும் பணியை துவக்குகின்றனர்.
மோகன் ராவ்வின் குடும்ப உறுப்பினர்கள், வெளி மாநிலம், நாடுகளில் வசிக்கின்றனர். இவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை, வீட்டுக்கு வந்து, விநாயகர் சிலைகளை தயாரிக்கின்றனர். இவர்கள் எங்கிருந்தாலும், பண்டிகை நாட்களில் ஒன்று சேர்கின்றனர்.
இவர்கள் தயாரிக்கும் சிலைக்கு, அதிக டிமாண்ட் உள்ளது என்றாலும், இடம் பற்றாக்குறையால் அதிகமான சிலைகள் தயாரிக்க முடிவதில்லை.
இவர்கள் பணத்துக்காக இல்லாமல், இதை ஒரு சேவையாகவே கருதி செய்கின்றனர்.
இம்முறையும் வெவ்வேறு அளவுள்ள, பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆர்டர்கள் குவிந்துள்ளன.
