பொய் தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
பொய் தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
ADDED : ஆக 26, 2026 11:24 PM
சாம்ராஜ்நகர்: 'ஹனுாரில், மூன்று தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் குறித்து, பொய் தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, சாம்ராஜ்நகர் எஸ்.பி., முத்துராஜ் எச்சரித்துள்ளார்.
சாம்ராஜ்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஹனுார் வனப்பகுதியில், கடந்த 15ம் தேதி வனத்துறையினர் நடத்திய, துப்பாக்கி சூட்டில், மூன்று தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதுபற்றி, சமூக வலைத்தளங்களில் ஆதரவு, எதிர்ப்பு கருத்துகள் பதிவிடப்படுகின்றன. சிலர் பொய் தகவல் பரப்புகின்றனர்.
சமூக ஊடகங்களை தொடர்ந்து கண்காணிக்கிறோம். பொய் தகவல் பரப்புவோர், ஆத்திரமூட்டும் வகையில் கருத்து தெரிவிப்போர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ஹனுார் தாலுகா ஒட்டரதொட்டி மாட்டள்ளியில் வசிக்கும் திவ்யானந்த் என்பவர் பேசிய ஆடியோ நேற்று வெளியானது.
அந்த ஆடியோவில் அவர் பேசியதாவது:
கர்நாடகா - தமிழகம் இடையே, 1956ம் ஆண்டு எல்லை சட்டம் உள்ளது. இந்த சட்டத்தில், கர்நாடகாவில் வசிக்கும் தமிழர்கள் தாய்மொழியான தமிழை படிக்கலாம். ஆட்சி, அதிகாரத்தில் அவர்களுக்கும் சம பங்கு உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விதான் சவுதாவில் தமிழர்களுக்காக தனி கமிஷன் உள்ளது.
காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., கட்சிக்கு தமிழர்கள் ஓட்டு பிரிந்து செல்கின்றன. நமக்குள் ஒற்றுமை இல்லை. கர்நாடகாவில் 65,000 தமிழர்கள் ஓட்டு உள்ளது. நான் கூறுவது அனைத்தும் உண்மை. மதம், மொழி அடிப்படையில் மக்களை நான் பிரிக்கிறேன் என்று நினைத்தால், என் மீது அவதுாறு வழக்கு போடட்டும்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.
