விதிமீறல் கட்டுமானங்களை வரைமுறை செய்ய கடும் எதிர்ப்பு
விதிமீறல் கட்டுமானங்களை வரைமுறை செய்ய கடும் எதிர்ப்பு
ADDED : மே 16, 2026 03:38 AM
பெங்களூரு: விதிமீறல் கட்டுமானங்களை வரைமுறை செய்யும், பெருநகர பெங்களூரு ஆணையத்தின் திட்டத்துக்கு எதிர்ப்பு வந்துள்ளது.
நகரில் அரசின் விதிகளை மீறி ஏராளமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இவற்றுக்கு குடியிருப்புச் சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. இத்தகைய கட்டடங்களுக்கு மின்சாரம், தண்ணீர் இணைப்பு வழங்குவதில் சட்டச்சிக்கல் உள்ளது.
இந்த சிக்கலை தீர்க்க அதிகபட்ச அபராதத்துடன் விதிமீறல் கட்டுமானங்களை முறைப்படுத்துவது என அரசு முடிவு செய்தது. அதன்படி, 15 சதவீதம் வரையிலான கட்டட விதி மீறல் வரம்பை தளர்த்துவதற்கு, பெங்களூரு மாநகராட்சி கட்டட துணை விதிகள் 2026ல் திருத்தம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, 500 சதுர மீட்டர் வரையிலான மனைகளில் கட்டப்பட்ட கட்டடங்களில், 15 சதவீதம் வரையிலான விதிமீறல்கள் முறைப்படுத்தப்படலாம். பெரிய மனைகளுக்கு கூடுதல் நிபந்தனைகள் விதிக்க வேண்டும்.
அங்கீகரிக்கப்படாத மொட்டை மாடி கட்டுமானம், அடித்தள விரிவாக்கங்கள், சான்றிதழ்கள் பெறாமல் குடியிருத்தல் உள்ளிட்ட பல்வேறு வகை விதிமீறல்களுக்கு அபராதம் வசூலிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த பரிந்துரை, சட்டத்திருத்தம் குறித்து, ஏப்ரல் 30க்குள் கருத்து தெரிவிக்கும்படி, பொதுமக்களிடம், பெருநகர பெங்களூரு ஆணையம் கோரிக்கை விடுத்திருந்தது. மின்னஞ்சல்கள், கடிதங்கள் உள்ளிட்ட முறைகளில் தங்கள் ஆட்சேபனைகளையும், பரிந்துரைகளையும் பொதுமக்கள் சமர்ப்பித்தனர்.
இவற்றில் பெரும்பாலானவை, அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக அமைந்துள்ளன என, ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.
விதி மீறல் கட்டடங்களை வரைமுறை செய்தால், எதிர்காலத்தில் விதி மீறல்கள் மேலும் அதிகரிக்கும் என, பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
