ADDED : செப் 20, 2025 04:54 AM
ஹாசன்: தோழியுடன் பூங்காவில் அமர்ந்திருந்த வீடியோ, சமூக வலைதளத்தில் பரவியதால், இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.
ஹாசன் நகரின், கல்லஹள்ளி கிராமத்தில் வசித்தவர் பவன், 21. இவர் மொசளஹொசஹள்ளி பட்டப்படிப்பு கல்லுாரியில், இறுதியாண்டு பி.ஏ., படித்து வந்தார்.
கடந்த 17ம் தேதி, தன் தோழியுடன் ஹாசனுக்கு வந்து, இங்குள்ள பூங்காவுக்கு சென்றனர்.
அங்கு இருக்கையில் அமர்ந்து, பேசும்போது நட்புடன் தோழியின் கையை பிடித்தபடி பேசினார்.
இதை கவனித்த ஒரு பெண், வீடியோ எடுத்து, தவறாக சித்தரித்து, ரீல்ஸ் செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். 30 நொடிகள் கொண்ட வீடியோவில், 'ஹாய் நண்பர்களே! குழந்தைகள் விளையாடும் இடத்தில், ஆணும், பெண்ணும் இப்படி அறுவறுப்பாக நடந்து கொள்கின்றனர்.
பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரியாதா? இவர்களை பெற்றோர் எதற்காக படிக்க வைக்கின்றனர்?' என, கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் பரவியது. இதை பவனின் நண்பர்கள் கவனித்து, அவரிடம் கூறினர்.
அதிர்ச்சியடைந்த அவர், 'தன்னுடன் இருந்த தோழிக்கு, பிரச்னை ஏற்பட கூடாது' என, நினைத்து அந்த வீடியோவை அழிக்க முயற்சித்தார். ஆனால் முடியவில்லை.
நேற்று முன் தினம் மாலை வகுப்பு முடிந்து, கல்லுாரியில் இருந்து வீட்டுக்கு வந்த பவன், மன வருத்தத்தில் இருந்தார். நேற்று அதிகாலை, மாட்டு கொட்டகையில் துாக்கிட்டு பவன் தற்கொலை செய்து கொண்டார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, இவரது தந்தை மாரடைப்பால் காலமானார். அதன்பின் பவனின் தாய், கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்தார். இறுதியாண்டு படிப்பு முடிந்து, நல்ல வேலைக்கு சென்று, குடும்பத்தை காப்பாற்றுவார் என, தாய் எதிர்பார்த்தார்.
ஆனால் யாரோ ஒரு பெண்ணின் செயலால், பவன் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான பெண்ணை கண்டுபிடித்து, தண்டிக்க வேண்டும்' என, குடும்பத்தினர் கோரூரு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.