கே.பி.எஸ்., மேக்னட் திட்டம் மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு
கே.பி.எஸ்., மேக்னட் திட்டம் மாணவர் அமைப்பினர் எதிர்ப்பு
ADDED : ஏப் 01, 2026 04:03 AM

துமகூரு: ' 'கே.பி.எஸ்., மேக்னட்' திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர்.
கிராமப்புறங்களில் குறைந்த மாணவர்கள் படிக்கும் அரசு பள்ளிகளை ஒன்றிணைத்து, அதிநவீன வசதிகள் கொண்ட பள்ளிகளை உருவாக்கும் 'கே.பி.எஸ்., மேக்னட்' திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த உள்ளது.
இத்திட்டத்திற்கு பல அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் எக்காரணம் கொண்டும் மூடப்படக்கூடாது என கூறுகின்றனர். இதை எதிர்த்து மாநிலத்தில் பல பகுதிகளிலும் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இவ்வகையில், துமகூரு நகர் பகுதியில் அகில இந்திய ஜனநாயக மாணவர் அமைப்பு போராட்டம் நடத்தியது. போராட்டத்தில் மாணவர்கள், பெற்றோர், மக்கள் பங்கேற்றனர்.
போராட்டத்தில் பங்கேற்ற அமைப்பினர் கூறியதாவது:
துமகூரு மாவட்டத்தில் கிராமப் பகுதிகளில் மட்டும் 1,200 அரசு பள்ளிகள் இருக்கின்றன.
இந்த பள்ளிகளை எக்காரணம் கொண்டும் மூடவிட மாட்டோம். ஒரு காலத்தில் வீட்டிற்கு அருகில் பள்ளிகள் கட்டப்பட்டன. தற்போது வீட்டின் அருகில் இருக்கும் பள்ளிகளை மூடுவதற்கு அரசு முடிவு செய்து உள்ளது.
பள்ளிக்கு செல்ல நீண்ட தூரம் மாணவர்கள் பயணிக்க, பெற்றோர் விரும்பமாட் டார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
