ADDED : ஆக 09, 2026 11:14 PM
பெங்களூரு: விபத்தில் இறந்த மாணவியின் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மைசூரின் நஞ்சன்கூடுவை சேர்ந்தவர் மானசா, 23. பெங்களூரு பல்கலையின் காட்சி கலை துறையில் முதலாம் ஆண்டு முதுகலை படிப்பு படித்தார். கடந்த மாதம் 30ம் தேதி பல்கலைக்கழக வளாகத்திற்குள் செல்லும் சாலையை கடக்கும் போது, மானசா மீது ஆட்டோ மோதியது.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், கடந்த 5ம் தேதி இறந்தார். பல்கலை நிர்வாக அலுவலகத்தில் இருந்து நாகரபாவி சதுக்கம் வரை சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்து நடப்பதாக, மாணவியர் போராட்டம் நடத்தினர். மானசா குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் மானசா குடும்பத்திற்கு முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து 3 லட்சம் ரூபாயும்; பல்கலைக்கழகம் சார்பில் 7லட்சம் ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
