அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு ஆலோசனை சிவகுமார் டில்லி பயணம்
அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு ஆலோசனை சிவகுமார் டில்லி பயணம்
ADDED : ஆக 09, 2026 11:14 PM
பெங்களூரு: பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், கட்சி மேலிட தலைவர்களை சந்திக்க, முதல்வர் சிவகுமார் டில்லி சென்றுள்ளார்.
கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் கடந்த 3ம் தேதி நடந்தது. 19 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சர் பதவி கிடைக்காததால் தினேஷ் குண்டுராவ், எச்.கே.பாட்டீல், கிருஷ்ணப்பா உள்ளிட்ட மூத்த எம்.எல்.ஏ.,க்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சி பலன் அளிக்கவில்லை.
இன்னும் சில எம்.எல்.ஏ.,க்கள் வரும் 13ம் தேதி, பெங்களூரில் ஒன்று கூடி ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், புதிதாக பதவியேற்ற ஒரு சில அமைச்சர்களை ராஜினாமா செய்ய வைத்து, அவர்களுக்கு பதிலாக அதிருப்தியாளர்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்க, முதல்வர் சிவகுமார் முடிவு செய்துள்ளார்.
இதுபற்றி கட்சி மேலிடத்திடம் விவாதித்து முடிவு எடுக்கவும் பெண் எம்.எல்.ஏ.,க்களில் யாருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்பது பற்றி ஆலோசிக்கவும் முதல்வர் சிவகுமார் நேற்று மாலை டில்லிக்கு புறப்பட்டார்.
இன்று அல்லது நாளைக்குள் மேலிட தலைவர்களிடம் பேசி, யாரை அமைச்சரவையில் இருந்து கைவிடுவது, யாரை சேர்ப்பது என்பது பற்றி முடிவு எடுப்பதுடன், அமைச்சர்களுக்கு என்னென்ன இலாகாக்கள் என்பது பற்றியும் முடிவு எடுக்க உள்ளார்.
பதவியை காப்பாற்றி கொள்ள, சில அமைச்சர்களும் டில்லி சென்றுள்ளனர். வரும் 13ம் தேதி சட்டசபை கூட்டத்தொடர் துவங்க உள்ள நிலையில், கட்சியில் உள்ள பிரச்னைகளை முடித்து வைக்க, சிவகுமார் மும்முரம் காட்டுகிறார்.
